ஆப்கனில் ஹெலிகாப்டர் விழுந்து 4 அமெரிக்க வீரர்கள் பலி
காபூல்: ஆப்கானி்தானில் இன்று காலை நடந்த 3 நேட்டோ படையினரின் ஹெலிகாப்டர் விபத்துக்களில் நான்கு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த மூன்று ஹெலிகாப்டர்களில் இரண்டு நேருக்கு நேர் வானில் மோதி வெடித்தன. ஒன்று, போதைக் கடத்தல்காரர்களை கண்காணிக்கச் சென்றபோது எதிர் தரப்பினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இரு ஹெலிகாப்டர்களும் தெற்கு ஆப்கானிஸ்தானில் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. இது தலிபான்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். எனவே இது விபத்தா அல்லது தலிபான்கள் இரு ஹெலிகாப்டர்களையும் சுட்டு வீழ்த்தினரா என்பது தெரியவில்லை.
ஹெலிகாப்டர் விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் வேயன் ஷாங்க்ஸ் கூறுகையில், அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச அமைதி காக்குப் படையினர் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்றார்.
விபத்துக்குள்ளான இன்னொரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி நொறுங்கி விழுந்ததாக முதலில் வந்த தகவல்கள் கூறின. ஆனால் இதை எதிர்த் தரப்பினர் வீழ்த்தியதாக பின்னர் வந்த தகவல்கள் தெரிவித்தன.
தீவிரவாதிகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர்களைத் தேடி இந்த ஹெலிகாப்டர் சென்றபோது இச்சம்பவம் நடந்தது.
தலிபான்கள் தரப்பிலிருந்து இதுகுறித்து பதில் ஏதும் இல்லை.
இந்த ஆண்டு இதுவரை 256 அமெரிக்க வீரர்கள் உள்பட 424 சர்வதேசப் படையினர் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டுள்ளனர்.