ஆர்.டி.ஐ கேள்வி-தப்பிக்க ஐஐடிக்களின் 'அலேக்' ஐடியா!
டெல்லி: ஐஐடி கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்த தகவல்களால் அதிருப்தி அடைந்துள்ள ஐஐடி நிர்வாகங்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இதுபோன்ற தகவல்களைக் கோருவோரிடமிருந்து தப்பிக்க புதிய உத்தியைக் கையாள ஆரம்பித்துள்ளனவாம்.
ஐஐடி நிறுவனங்கள் நடத்தும் பொது நுழைவுத் தேர்வில் பங்கேற்ற மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்டுப் பெற முடியும். முன்பு அனைத்து மாணவர்களின் மதிப்பெண் விவரத்தை சிடியில் போட்டுக் கொடுப்பார்கள்.
ஆனால் தற்போது நூதன டிரிக்கை ஐஐடி நிர்வாகங்கள் அமல்படுத்தியுள்ளன. இந்த ஆண்டு நடந்த ஐஐடி பொது நுழைவுத் தேர்வில் கலந்து கொண்ட 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் மதிப்பெண் விவரத்தைக் கேட்டு ராஜீவ் குமார் என்கிற ஐஐடி காரக்பூர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பேராசிரியர் விண்ணப்பித்திருந்தார்.
அவரிடம், தகவல் தருகிறோம், ஆனால் சிடியில் தர மாட்டோம். ஹார்ட் காப்பியாகத்தான் தருவோம் என்று கூறியுள்ளது நிர்வாகம். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளார் ராஜீவ் குமார்.
ஹார்ட் காப்பி என்றால் பல ஆயிரம் பக்கம் வரும். அதில் எப்படி, மதிப்பெண்களை சரி பார்க்க முடியும், முறைகேடு எங்கு இருக்கிறது என்பதைக் கண்டறிய முடியும் என்று புலம்புகிறார் ராஜீவ் குமார். மேலும் இந்த மதிப்பெண் பட்டியலை இதுபோல அச்சிட்டுத் தருவதற்கான செலவையும் ராஜீவ் குமாரே ஏற்க வேண்டும் எனவும் நிர்வாகம் கூறி விட்டதாம்.
இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார் ராஜீவ் குமார். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த மூன்று முறை நடந்த பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண் விவரத்தை ஆர்.டி.ஐ மூலம் நான் பெற்றேன். அப்போதெல்லாம் சிடியில்தான் அதைக் கொடுத்தனர். அதை வைத்து ஆய்வு செய்ய சரியாக இருந்தது.
ஆனால் இப்போது திடீரென ஹார்ட் காப்பியாகத்தான் தருவோம், செலவையும் நீங்களே ஏற்க வேண்டும் என்கிறார்கள். இது மிக மிக அநியாயம். இதுகுறித்து மத்திய தகவல் ஆணையர் சைலேஷ் காந்தியிடம் புகார் கொடுத்துள்ளேன். நவம்பர் 6ம் தேதி இதுகுறித்து அவர் விசாரணை நடத்தவுள்ளார் என்றார்.
ஆனால் ஐஐடி குவஹாத்தியின இயக்குநரும், பொது நுழைவுத் தேர்வின் பொறுப்பாளருமான கெளதம் பரூவா சிடியாக தர மறுப்பதற்கான காரணத்தை இப்படிக் கூறுகிறார்.
சிடி கேட்டு நிறையப் பேர் மனு செய்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் உண்மையான நோக்கத்திற்காக கேட்கிறார்களா என்பது சந்தேகமாக உள்ளது. இவர்களில் பலர், ஐஐடி நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்குத் தேவையான திட்டமிடல், எந்த ஊரில் பயிற்சி வகுப்புகளை ஆரம்பிக்கலாம் என்பது உள்ளிட்ட காரணங்களுக்காக இதைக் கேட்கிறார்களோ என நாங்கள் சந்தேகப்படுகிறோம்.
முடிவுகளை நாங்கள் ரகசியமாக வைத்துக் கொள்ள ஒருபோதும் விரும்பியதில்லை. அனைவருக்கும் அதை தெரியப்படுத்துவதில் எங்களுக்கு எந்த சங்கடமும் இல்லை.
மத்திய தகவல் ஆணையம் விரும்பினால், எங்களது ஒரிஜினல் மதிப்பெண் பட்டியலை தலைமை தகவல் ஆணையர் முன்பு போட்டுக் காட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications