பிரதமர்-சோனியா வருகை: காஷ்மீரில் பந்த்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இன்று வருகை தந்தனர்.
அனந்தநாக்கில் நடந்த நிகழ்ச்சியில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதியை இணைக்கும் அனந்தநாக் - குவாசிகந்த் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர்.
பின்னர் கூடியிருந்த பிரமாண்டக் கூட்டத்தில் பிரதமர் உரை நிகழ்த்தினார். மன்மோகன் சிங் உருதில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், உருப்படியான முறையில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டுமானால், முதலில் தீவிரவாதம் கட்டோடு ஒழிக்கப்பட வேண்டும். கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.
பாகிஸ்தானில் உள்ள பெரும்பான்மையான மக்கள், இந்தியாவுடன் அமைதியான முறையிலும், ஒத்துழைப்புடனும் வாழவே விரும்புவார்கள் என்பது எனது உறுதியான நம்பிக்கையாகும். இந்தியா, பாகிஸ்தான் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதையே அந்த நாட்டு மக்கள் விரும்புவார்கள். நிரந்தரமாக இப்பிராந்தியத்தில் அமைதி வர வேண்டும். இது இரு நாட்டு மக்களின் ஒரே விருப்பமாக உள்ளது.
பாகிஸ்தான் அரசுடன், மனிதாபிமான பிரச்சினைகள் குறித்தும் பிற பிரச்சினைகள் குறித்தும் பேச நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஆனால் பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் மக்களும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும், நம்பிக்கையை உருவாக்க வேண்டும், அங்கு தீவிரவாதம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்கள் பாகிஸ்தான் மண்ணில் நடைபெறுவதை அந்த நாடு தடுத்து நிறுத்த வேண்டும். தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்த பாகிஸ்தான் அரசு முன்வர வேண்டும்.
அவர்களது பயிற்சி முகாம்களை அழிக்க வேண்டும். அவர்களது கட்டமைப்புகள் தவிடுபொடியாக்கப்பட வேண்டும். தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது மனித குலத்தின் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்காக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
தீவிரவாதத்தின் உண்மையான, கோரமான முகம் என்ன என்பதை இன்று பாகிஸ்தான் மக்கள் தங்களது கண்களால் பார்க்கத் தொடங்கியுள்ளனர் என்றார் சிங்.
காஷ்மீரில் பந்த் ...
பிரதமரின் வருகையைத் தொடர்ந்து அனந்தநாக் மாவட்டத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதற்கிடையே பிரதமரின் வருகையைக் கண்டித்தும், எதிர்ப்பு தெரிவித்தும், ஹுரியத் அமைப்பினர் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பஸ்கள் ஓடவில்லை. கடைகள் மூடப்பட்டிருந்தன. வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. தனியார் வாகனப் போக்குவரத்து மட்டுமே காணப்பட்டது.
அரசு அலுவலகங்கள், வங்கிகள், கல்வி நிலையங்களிலும் யாரும் பெரிய அளவில் வரவில்லை.