கோவையில் அமையும் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி
திருநெல்வேலி: தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (இ.எஸ்.ஐ) சார்பில், நாட்டில் 11 இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்படும். இதில் கோவையும் இடம் பெறும் என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
இ.எஸ்.ஐ சார்பில், நெல்லை வண்ணாரப்பேட்டையில் 50 கோடி ரூபாய் செலவில், 50 படுக்கைகளுடன் கூடிய புதிய மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கார்கே பங்கேற்றார்.
பின்னர் அவர் பேசுகையில்,
இ.எஸ்.ஐ. சார்பில், நாட்டில் 11 இடங்களில் மருத்துவக் கல்லூரிகளும், 12 மருத்துவ பட்டய மேற்படிப்பு ஆராய்ச்சிக் கழகங்களும் துவங்கப்படும். அதில், ஒரு மருத்துவக் கல்லூரி கட்டடப் பணி, பாட்னாவில் நடக்கிறது. இ.எஸ்.ஐ. தொழிலாளர்கள் அதிகமுள்ள கோவையிலும் மருத்துவக் கல்லூரி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இ.எஸ்.ஐ.மூலம் 1.25 கோடி தொழிலாளர் குடும்பங்களின் ஐந்து லட்சம் பேர் பயன் பெறுகின்றனர். தமிழகத்தில், 55,984 நிறுவனங்களைச் சேர்ந்த 17 லட்சம் பேர் இ.எஸ்.ஐ., உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 60 ஆண்டாக இத்திட்டம் சிறப்பாக செயல்படுகிறது.
இத் திட்டத்தின் கீழ், தொழிலாளர் குடும்பங்கள் இலவச சிகிச்சை பெறுவதற்காக 144 மருத்துவமனைகளும், 1,400 மருந்தகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பூரில், 50 படுக்கை வசதி கொண்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை விரைவில் துவங்கப்படும்.
பீடித் தொழிலாளர்கள் ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களைப் பெற முதலில் அவர்கள் தங்களது பெயர்களை பணிப் பதிவேட்டில் பதிவு செய்வது அவசியமாகும். நிறுவன உரிமையாளர்கள், தொழிலாளர்கள், தொழிற் சங்கங்கள் இணைந்து செயல்பட்டால்தான் தொழிலாளர்கள் அனைத்து பயன்களையும் பெறமுடியும் என்றார்.
இந்த விழாவில், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மைதீன்கான், நெல்லை எம்.பி., ராமசுப்பு, மாவட்ட கலெக்டர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications