மூளைச்சாவு: மெகா டிவி ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பகுதியைச் சேர்ந்தவர் வேம்படிபேச்சி. இவரது மகன் அய்யப்பன். சென்னை அடையாரில் உள்ள மெகா தொலைக்காட்சி நிறுவனத்தில் விஷூவல் பயிற்சி எடிட்டராக பணியாற்றி வந்தார்.
கடந்த 25-10-2009 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது பணிகளை முடித்து மதியம் 2.30 மணியளவில் துரைப்பாக்கம் நோக்கி தனது வாகனத்தில் சாலையோரத்தில் சென்று கொண்டிருந்தர்.
அப்போது தரமணி - திருவான்மியூர் சாலை சந்திப்பு அருகே அசுரவேகமாக வந்த கார் மோதி நிற்காமல் சென்றுவிட்டது. அந்த காரை பொதுமக்கள் திருவான்மியூர் சிக்னல் அருகே மடக்கி பிடித்து போக்குவரத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அப்போது அந்த வண்டியின் உரிமையாளரே வண்டியை ஓட்டி வந்தது தெரியவந்தது. மேலும் அவர் குடிபோதையில் நிதானம் தெரியாமல் இருந்ததால் அவரை காவல் துறையினர் சைதாபேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
விபத்தில் தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய அய்யப்பன், ஆபத்தான நிலையில் சென்னை லைப்லைன் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைக்கு பின் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அய்யப்பனின் மூளை செயலிழந்ததை நேற்று (26-10-2009) கண்டுபிடித்தனர். இதையடுத்து தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க அவரது பெற்றோர் முன்வந்தனர்.
இதைத் தொடர்ந்து அய்யப்பனின் 2 கண்கள், 2 சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை மருத்துவர்கள் தானமாக பெற்று, எழும்பூர் கண் மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, அரசு பொது மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
அரசு பொது மருத்துவமனையில் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்படுவது இது முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மெகா தொலைக்காட்சி ஊழியர்கள் சார்பில் மறைந்த அய்யப்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து அய்யப்பனின் உடல் சென்னை துரைப்பாக்கத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்த விபத்து குறித்து சாஸ்திரி நகர் போக்குவரத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.