தினையளவு நன்மை..பனையளவு கொள்ளை- விஜயகாந்த்
சென்னை: கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் தனியார் நிறுவனங்களும், புரோக்கர்களும் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்க வழி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த 20ம் தேதி வரை 5,817 பேர் இலவச உயர் சிகிச்சை பெற்றவர்கள் என்றும், இதற்கான செலவு 23 கோடியே 21 லட்சம் ரூபாய் என்றும் பதிவு செய்யப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 59 லட்சம் என்றும் விளம்பரம் செய்யப்படுகிறது.
ஆனால், சுகாதாரத் துறை அமைச்சர் அளித்த பேட்டியில், இதுவரை 6,000க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றும், 6.5 லட்சம் குடும்பங்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு, 20 லட்சத்து 36 ஆயிரம் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார். இதில் எது சரி?.
மேலும் இந்த கலைஞர் காப்பீட்டு திட்டம் துவங்கிய தினமே ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 130 கோடிக்கான காசோலையை மக்கள் வரிப்பணத்தில் இருந்து கொடுத்தது என்ன நியாயம்?.
ஏழைகளுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தேவைதான். ஆனால், அந்தத் திட்டத்தில் சமூகவிரோதிகள் கொள்ளை அடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மக்களுக்கு தினையளவு நன்மை என்றால் இதைச் செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு பனையளவு கொள்ளையடிக்க வழி செய்துள்ளது என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications