இஸ்லாமிய வாக்குகளை கவர புத்தகம் எழுதும் லாலு!
பாட்னா: தேசிய அரசியலில் நிராகரிக்கப்பட்டு நிலையில், பீகார் மாநில சட்டசபைத் தேர்தலில் மீ்ண்டும் அதிக இடங்களைக் கைப்பற்றும் நோக்கில், இஸ்லாமியர்களின் ஆதரவைத் திரட்டும் முகமாக புதிய புத்தகம் ஒன்றை எழுதப் போகிறாராம் லாலு பிரசாத் யாதவ்.
தேசிய அரசியலில் லாலு பிரசாத் யாதவின் முக்கியத்துவம் பொலிவிழந்து கிடக்கிறது. காங்கிரஸ் இவரை சீண்டுவதாக இல்லை.
இந்த நிலையில் அடுத்து வரப் போகும் பீகார் சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு சில காய்களை நகர்த்த முடிவு செய்துள்ளார் லாலு பிரசாத்.
அதன் முதல் கட்டமாக முஸ்லீம்களின் வாக்குகளைக் கவர அவர் தீர்மானித்துள்ளார்.
கடந்த 1990ம் ஆண்டு அத்வானி ரத யாத்திரை நடத்தினார். அப்போது பீகார் மாநிலத்திலும் யாத்திரை போனது. பின்னர் சமஷ்டிபூரில் அவரது ரத யாத்திரை முடிந்தது.
அப்போது முதல்வர் பதவியில் இருந்தவர் லாலு பிரசாத். அத்வானியின் ரத யாத்திரையை அவர் தடுக்க முயற்சிக்கவில்லை. மாறாக நடுநிலை வகிப்பதாக கூறி அமைதியாக இருந்து விட்டார். இதனால் பீகார் முஸ்லீம்கள் மத்தியில் லாலு மீது லேசான அதிருப்தி உள்ளது. தற்போது பீகார் முஸ்லீம்கள் காங்கிரஸ் பக்கம் சாய்ந்து விட்டனர். இதனால்தான் கடந்த சட்டசபைத் தேர்தலிலும், லோக்சபா தேர்தலிலும் லாலுவால் வெற்றி பெற முடியாமல் போனது.
இந்த நிலையில், தற்போது முஸ்லீம்களின் வாக்குகளைக் கவர லாலு திட்டமிட்டுள்ளார். அத்வானி ரத யாத்திரை வந்தபோது அதை ஏன் தான் தடுக்கவில்லை. தடுக்காமல் தனது கைகளைக் கட்டிப் போட்டது யார், எந்த சக்தி தன்னை தடுத்தது என்பது குறித்து புத்தகமாக எழுதப் போகிறாராம் லாலு.
பாட்னாவில் தன்னை சந்தித்த முஸ்லீம் சமுதாயத்தினர் மத்தியில் பேசுகையில், இந்த அறிவிப்பை வெளியிட்டார் லாலு. மேலும், 2010ல் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதாதளத்தை மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்த முஸ்லீம்கள் உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் லாலுவின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் ஒருவர் கூறுகையில், லாலு புத்தகம் எழுதப் போகிறார் என்பதே நகைச்சுவையாக உள்ளது. மேலும், அந்தப் புத்தகத்தை உண்மையிலேயே அவர் எழுதுவாரா என்பதும் சீரியஸாக யோசிக்க வேண்டிய விஷயம்.
படித்துத் தெரிந்து கொள்வதை விட கண்ணால் பார்த்தவை இன்னும் மக்கள் மனதிலிருந்து மாறாமல் உள்ள நிலையில் லாலுவின் புத்தக அறிவிப்பு இப்போதைக்கு சீரியஸாக கருத முடியாத நிலைதான் உள்ளது என்றார்.
அதேசமயம், பாஜக பலவீனமடைந்துள்ள நிலையில் லாலு மட்டுமல்லாமல், முலாயம் சிங் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோருக்கு இப்போது எதிரியாக மாறியிருப்பது காங்கிரஸ்தான். லாலு, யாதவ், பாஸ்வான் ஆகியோருக்கு உ.பி, பீகாரில் பலம் போய் விட்டது. அதை அவர்கள் உணராமல் உள்ளனர்.
முஸ்லீம் வாக்குகளை இப்போது காங்கிரஸ்தான் தன் பக்கம் பலமாக சேர்த்து வருகிறது. எனவே காங்கிரஸை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய நிலைக்கு இந்த மூன்று பிராந்தியக் கட்சிகளும் தள்ளப்பட்டு வருகின்றன என்று வட மாநில அரசியல் நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வரும் அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
புத்தகம் எழுதப் போவதாக லாலு கூறுவது இது முதல் முறையல்ல. முன்பே, எதிர்க்கட்சித் தலைவர்கள் குறித்து புத்தகம் எழுதி அம்பலப்படுத்தப் போவதாக பலமுறை கூறியவர்தான் லாலு.
ஒரு ஆண்டுக்கு முன்பு 15 ஆண்டு காலமாக பீகாரை ஆட்சி செய்து வந்த எனது புகழைக் குலைத்த சக்திகள் குறித்து புத்தகம் எழுதுவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எழுதவில்லை. அதேபோல சிபிஐயின் முகத்திரையைக் கிழிக்கும் புத்தகம் ஒன்றை எழுதப் போவதாக கூறினார். அதுவும் நடக்கவில்லை.
ஐக்கிய ஜனதாதள செய்தித் தொடர்பாளரும், லாலுவின் முன்னாள் நண்பருமான சிவானந்த திவாரி கூறுகையில், அத்வானி விவகாரம் பழையது, நடந்து முடிந்து போனது. அதைப் பற்றி நிறையப் பேசியாகி விட்டது. இந்த நிலையில் புத்தகம் எழுதுவதாக லாலு கூறுவது வேடிக்கையாக உள்ளது.
இப்படி காமெடியாக பேசிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு மத்திய அரசிடம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி பீகார் மாநிலத்திற்கு ஏதாவது நல்லது செய்ய லாலு முயன்றால் நன்றாக இருக்கும் என்றார்.
நடந்தது என்ன...
1990ம் ஆண்டு ரத யாத்திரை மேற்கொண்ட அத்வானி பீகாருக்குள்ளும் நுழைந்தார். அவரை யாத்திரை தொடங்கிய பாட்னாவில் வைத்தை தடுக்குமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆனால் லாலு பாட்னாவில் வைத்து அத்வானியைக் கைது செய்யவில்லை.
மாறாக, ரத யாத்திரை முடிவடைந்த சமஷ்டிபூர் வரை அத்வானியை அவர் கண்டுகொள்ளவில்லை. சமஷ்டிபூர் வந்த பிறகுதான் அத்வானி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.