கோயம்பேட்டில் இருந்து தாம்பரம், பூந்தமல்லிக்கு இடம் பெயரும் ஆம்னி பஸ்கள்?

சென்னை நகரில் முன்பு எழும்பூர், தி.நகர் உள்பட பல இடங்களிலிருந்து ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இஷ்டத்திற்கு ஆங்காங்கு இவை புகுந்து புறப்பட்டுப் போய் வந்ததால் நகரில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து அனைத்து பேருந்துகளையும் கோயம்பேடு ஒருங்கிணைந்த பஸ் நிலையத்திற்கு மாற்றினர். அப்படியும் கூட இப்போதும் பல பஸ்கள் நகருக்குள் ஆங்காங்கு வந்தபடிதான் உள்ளன.
ஆனால் தற்போது நகரில் போக்குவரத்து நெரிசல் பல மடங்காகி விட்டது. இதனால் கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பஸ் நிலையத்தை வெளியே கொண்டு செல்ல அதிகாரிகள் யோசித்து வருகிறார்கள்.
சென்னை பெருநகர 2-வது வரைவு திட்டம் தயாரித்த போது போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் சென்னை நகருக்குள் பஸ்கள் வரக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தினர். வாகன நெரிசலை குறைப்பதற்கு இது சிறந்த வழியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர்.
இதன் ஒரு கட்டமாக கோயம்பேட்டில் இயங்கும் ஆம்னி பஸ் நிலையத்தை தாம்பரம் மற்றும் பூந்தமல்லிக்கு மாற்ற ஆலோசிக்கப்படுகிறது.
மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பஸ்களை தாம்பரத்திற்கும், கர்நாடகா, ஆந்திரா மாநிலம் நோக்கி செல்லும் ஆம்னி பஸ்களை பூந்தமல்லிக்கும் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவரான அமைச்சர் பரிதி இளம் வழுதி கூறுகையில்,
சென்னை நகர போக்குவரத்து நெரிசலை குறைக்க அனைத்து பேருந்துகளையும் வெளியே கொண்டு செல்ல முடியாது. போலீசார், பொதுமக்கள் கருத்தை மையமாக வைத்து முதல் கட்டமாக ஆம்னி பஸ்களை வெளியே கொண்டு போக ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் நிறைவேற்றப்படும்.
முதல்வர், துணை முதல்வரிடம் இந்த கருத்துக்களை எடுத்து செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை தனியார் பஸ் ஆபரேட்டர்கள் எவ்வாறு எடுத்து கொள்ள போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications