For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'என் உயிரே வா!'...சரத்குமார் காத்திருக்கிறார்..!

Google Oneindia Tamil News

சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் வரும் 31ம் தேதி முதல் நவம்பர் 4ம் தேதி வரை நடைபெறும் என்று அக்கட்சித் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் எழுச்சி மிகு கண்மணிகளே! உங்களைச் சந்தித்து மாதங்கள் கடந்து விட்டாலும், எந்நேரமும் உங்கள் நினைவோடு வலம் வரும் நான், உங்களைச் சந்திக்க வருகிறேன்.

நடிகர் சங்க பணிகள், திரைப்பட பணிகள், மீடியாவாய்ஸ் (இவர் நடத்தும் பத்திரிக்கை) பணிகள் என கூடுதல் பொறுப்புகள் காரணமாக உங்களைச் சந்தித்து மாதங்கள் சில கடந்து விட்டன. அக்குறைபோக்கி உங்கள் எழுச்சி முகம் காண ஓடோடி வருகிறேன்.

31.10.09 அன்று சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மதுரை (ராம் விக்டோரியா அரங்கம்), 1.11.09 காலை 10 மணிக்கு நெல்லை (கே.ஆர்.மஹால்), 2.11.09 மாலை 4 மணிக்கு கும்பகோணம் (ஸ்ரீசங்கரா மஹால்), 3.11.09 மாலை 4 மணிக்கு சேலம் (திருமலையம்மாள் மஹால்), 4.11.09 காலை 10 மணிக்கு திருப்பூரில் (ராமசாமி முத்தம்மாள் அரங்கம்) நடைபெறும் செயல் வீரர்கள் கூட்டத்தில் உங்களைச் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.

அதே 4ம் தேதி மாலை 4 மணிக்கு ஈரோடு, அம்மாபேட்டை ஒன்றியம், வெள்ளித் திருப்பூர்மரவபாளையத்தில் பெருந் தலைவர் காமராஜர் சிலையை திறந்து வைக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்திருக்கிறது.

அரசியலில் ஆரம்பக்கட்டத்தை தொட்டிருக்கும் நமக்கு, தொடரான பணிகள், அதிக சுமைகளை அளித்துள்ளது. நம் லட்சியம் நிறைவேற அயராது பாடுபட வேண்டிய கடமை நம்மை அழைத்துக் கொண்டிருக்கிறது.

பதவிக்காக மட்டுமே இயக்கம் கண்டவர்கள் நாமில்லை. நம் தமிழகம், நமது இந்தியா ஒளிவீசி திகழ, நம் மக்கள் அனைத்து வளங்களோடும் நிம்மதியாக வாழ, அடிப்படை வசதிகள், கல்வி, பொருளாதாரத்தில் நகரங்களுக்கு இணையாக, கிராமங்களும் திகழ, விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண, உழைக்கும் மக்கள் வாழ்வு உயர ஆயிரக்கணக்கான பணிகள் காத்துக் கிடக்கின்றன. அவற்றை நோக்கி நம் இயக்கம் வீறுநடை போடும் என்பது உறுதி.

அரசியல் வேறுபாடுகள் பாராது, மனித நேயத்தோடு பழகக்கூடிய பண்பை வளர்த்துக் கொண்டவர்கள் நாம். அந்த வழியில் செல்லும்போது சிலர் தவறான செய்திகளை பரப்பி விடுகிறார்கள். அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நம் சமத்துவ மக்கள் கட்சியை, பெருந்தலைவர் காமராஜரின் வழியில் நம் மக்கள், நம் நாடு முன்னேற நாளும் உழைக்கக்கூடிய வலுவான இயக்கமாக, இரும்புக் கோட்டையாக திகழும் நிலையை, நம் உழைப்பால் பெற்றிடுவோம்.

செயல்வீரர் கூட்டங்களில் உங்களைக் காணும் ஆவலில் காத்திருக்கிறேன். ஒவ்வொரு தொண்டனையும், சந்திக்க காத்திருக்கிறேன். என் கரம் பற்றினால் பாயும் மின்சார உற்சாகத்தை உனக்கு வாரி வழங்க, என் உயிரே வா!.

இவ்வாறு கூறியுள்ளார் சரத்குமார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X