நீதிபதி பி.டி.தினகரனுக்கு எதிராக கிராம மக்கள் போர்க்கொடி
சென்னை: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரனால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி திருவள்ளூர் மாவட்டம் காவேரிராஜபுரம் கிராம மக்கள் கோரியுள்ளனர்.
மேலும் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள பி.டி.தினகரன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.
வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்களைக் குவித்தது, அரசு நிலத்தை ஆக்கிரமித்தது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தினகரனுக்கு எதிராக குவிந்து வருகின்றன.
காவேரி ராஜபுரத்தில் அரசு நிலத்தை பெருமளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளார் தினகரன் என்பது ஒரு குற்றச்சாட்டு. அவர் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது உண்மையே என்று தாசில்தார் உள்ளிட்டோர் அறிக்கை கொடுத்துள்ளனர். இது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து தினகரனை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில், தினகரன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி காவேரிராஜபுரம் கிராம மக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இதுகுறித்து காவேரிராஜபுரம் தாளம் அறக்கட்டளை நிறுவனரும், நில ஆக்கிரமிப்புக்கு எதிரான அமைப்பின் தலைவருமான எம்.ராமன் கூறுகையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த வேலியை தினகரனின் ஆட்கள் அறுத்து எரிந்துள்ளனர். இதுவே அவரது ஆக்கிரமிப்புக்கு உதாரணமாகும்.
மாவட்ட ஆட்சித் தலைவர், வருவாய் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நடந்துள்ளது உண்மையே என்று அறிக்கை கொடுத்துள்ளனர்.
எனவே தினகரன் மீது அரசு உரிய நடவடிக்கை, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், நவம்பர் 9ம் தேதி தினகரனுக்குச் சொந்தமான 362.8 ஏக்கர் மாந்தோப்புக்கு அருகே, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலத்தில் புகும் போராட்டத்தை நடத்தப் போகிறோம். இந்தப் போராட்டத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்போம் என்றார்.












Click it and Unblock the Notifications