78 தமிழ் அகதிகளை ஏற்க ஆஸ்திரேலியா மறுப்பு
சிட்னி: படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு தப்பி வரும் வழியில், ஆஸ்திரேலிய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு தற்போது இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள 78 தமிழர்களை ஏற்க முடியாது என ஆஸ்திரேலியா தெரிவித்து விட்டது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு 78 தமிழர்களுடன் வந்த படகை ஆஸ்திரேலிய சுங்கத் துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களை இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இவர்கள் இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அவர்களை மீண்டும் ஏற்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இதுதொடர்பாக இந்தோனேசிய அதிபர் பம்பாங் சுசிலோவுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டது. இந்தோனேசியாவில் இவர்களை வைத்துப் பராமரிப்பது, அதற்கான செலவுகளை ஆஸ்திரேலியா வழங்கும் என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டது என்றார்.
தற்போது சிங்கப்பூர் அருகே உள்ள பின்டன் தீவு என்ற இடத்தில் தமிழர்கள் இடம் பெற்றுள்ள ஓசியானிக் வைகிங் என்ற அந்த படகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து இறங்க அதில் உள்ள தமிழர்கள் மறுத்து வருகின்றனர்.
இதற்கிடையே, இவர்களை முகாமில் தங்க வைக்க போதிய வசதி இல்லை என்று பின்டன் தீவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீவன் ஸ்மித் கூறுகையில், நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் அகதிகளை மீட்டால் அவர்களை இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைப்பது எனவும், அவர்களின் எதிர்காலம் குறித்து ஐ.நா. அகதிகளுக்கான ஆணையர் முடிவு செய்ய வேண்டும் என ஏற்கனவே இந்தோனேசியாவுடன், ஆஸ்திரேலியா உடன்பாடு கண்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications