ஜெய்ப்பூர் எண்ணை கிடங்கில் பயங்கர தீ - 12 பேர் பலி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள எண்ணை கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 12 பேர் பரிதாபமாக இறந்தனர். தொடர்ந்து தீ கொளுந்து விட்டு எரிந்து வருகிறது.
தீ அதுவாக அணைந்தால்தான் உண்டு, வேறு வழி இல்லை என்று இன்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் அருகே உள்ள இந்தியன் ஆயில் எண்ணை கிடங்கில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து படு வேகமாக தீ பரவி டிப்போ முழுவதும் கொளுந்து விட்டு எரிகிறது.
இந்த தீவிபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். தீவிபத்து குறித்த தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்தார் முரளி தியோரா. தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கேட்டபோது, இப்போது யாரும் எதுவும் செய்ய முடியாது. அதுவாக அணைந்தால்தான் உண்டு. இதற்கு மாற்று வழி கிடையாது என்றார் தியோரா.
தீ தொடர்ந்து தீவிரமடையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் யாரும் எதுவும் செய்ய முடியாத நிலை. இதற்கு மாற்று வழியும் இல்லை என்றார் தியோரா.
பாதிக்கப்பட்டோருக்கு உதவ அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று இரவு இங்கு தீவிபத்து ஏற்பட்டது. தொடர்ந்து தீ எரிந்து கொண்டுள்ளது. இதுவரை 12 பேர் இறந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
டிப்போவிலிருந்து ஒரு பைப்லைனுக்கு பெட்ரோலை மாற்றியபோது தீவிபத்து ஏற்பட்டது. பைப்லைனில் இருந்த கசிவுதான் விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
1.5 லட்சம் மக்கள் வெளியேற்றம்:
விபத்து காரணமாக டிப்போவுக்கு அருகில் உள்ள 10 கிராமங்களைச் சேர்ந்த 1.5 லட்சம் மக்கள், பத்து பொறியியல் கல்லூரிகளின் விடுதிகளில் தங்கியிருந்தோர் பாதுகாப்பு கருதி வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இந்தப் பகுதி முழுவதும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.