ஜெகன் ஆதரவு பெண் அமைச்சர் ராஜினாமா
ஹைதராபாத்: ஆந்திர மாநில மகளிர் நலத்துறை அமைச்சர் கொண்ட சுரேகா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்து விட்டார். ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்க வேண்டும் என்று கோரி இவர் விலகியுள்ளார்.
இதனால் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் மறுபடியும் குடைச்சல் கொடுக்கத் தொடங்கியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தனது ராஜினாமா குறித்து சுரேகா கூறுகையில், ராஜசேகர ரெட்டியின் மரணம் எனக்கு பெரும் வலியைக் கொடுத்துள்ளது. அவர் இல்லாத அமைச்சரவையில் என்னால் தொடர முடியாது.
இப்போதாவது ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்க காங்கிரஸ் மேலிடம் முன்வர வேண்டும் என்றார்.
தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் ரோசய்யாவிடம் கொடுக்காமல் நேரடியாக ஆளுநர் என்.டி.திவாரியைப் போய்ப் பார்த்துக் கொடுத்தார் சுரேகா.
ராஜசேகர ரெட்டி மரணமடைந்த நாள் முதலாகவே ஜெகனை முதல்வராக்க நடந்து வரும் போராட்டங்களில் முன்னிலையில் இருப்பவர் சுரேகா.
என்னை யாரும் மிரட்டி ராஜினாமா செய்ய வைக்கவில்லை. நானே விரும்பித்தான் இந்த முடிவை எடுத்தேன். ஜெகன் முதல்வராக விடாமல் சிலர் தடுத்து வருகின்றனர் என்றார் சுரேகா.