தலிபான் மிரட்டலை சந்திக்க தயார்-ராணுவ தளபதி
ஆக்ரா: தலிபான்களிடமிருந்து எத்தகைய சவால் விடப்பட்டாலும் அதை சந்திக்க இந்திய பாதுகாப்புப் படையினர் தயாராக உள்ளனர் என்று ராணுவ தலைமைத் தளபதி தீபக் கபூர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் முறைகள் அப்பாவிகளின் உயிரைப் பறிக்கும் வகையில் இருப்பது மட்டுமே தங்களைக் கவலைப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆக்ரா வந்த தீபக் கபூர் இதுகுறித்துக் கூறுகையில், தலிபான்களை சந்திக்கவும், சமாளிக்கவும் நமது படையினர் எப்போதும் தயார் நிலையில் உள்ளனர். ஆனால் தலிபான்கள் பயன்படுத்தும் போர் முறை தான் சற்று கவலைப்படுத்துகிறது.
படையினரோடு நேரடியாக மோதி வெல்ல அவர்களால் முடியாது. இதனால் அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பதையே அவர்கள் அதிகம் நாடுகின்றனர். இதை சமாளிக்க நமது சிறப்புப் படைப் பிரிவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தாக்குதல்களையும் சமாளிக்க நமது படையினர் தயாராகவே உள்ளனர் என்றார் தீபக் கபூர்.