வாஜ்பாயை விமர்சிக்கும் புத்தகம்-வெளியிட்ட சுதர்ஷன், ஜோஷி!!
'சூப்பர் பவரிங் இந்தியா' என்ற இந்த புத்தகத்தை முன்னாள் இந்திய விமானப் படை தலைவரான ஏர்மார்ஷல் ஏ.கே.முகோபாத்யாயா எழுதியுள்ளார். ஆர்எஸ்எஸ்சுக்கு நெருக்கமான இவர் தனது புத்தகத்தில் வாஜ்பாயை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது காஷ்மீர் மாநிலத்தில் அதிக அளவில் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால், அதைப் பற்றியெல்லம் கவலைப்படாமல் வாஜ்பாய் கவிதை எழுதிக் கொண்டு இருந்தார்.
ஆர்எஸ்எஸ்சுக்கு பணிந்து நடப்பது போல வாஜ்பாய் காட்டிக் கொண்டார். ஆனால், அவரது சந்தர்ப்பவாத செயல்களாலும் அரசியல் நடவடிக்கைகளாலும் பாஜக மட்டுமல்ல ஆர்எஸ்எஸ்சும் சேர்ந்து பாதிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
நேற்று நடந்த விழாவில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முன்னாள் தலைவர் கே.எஸ்.சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டு இந்த புத்தகத்தை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயலும் புத்தகம் எழுதுகிறார்:
இந் நிலையில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பிரதமர் அலுவலக அமைச்சராக இருந்த விஜய் கோயலும் ஒரு புத்தகம் எழுதப் போவதாக அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலத்தில் என் நாட்கள் என்ற தலைப்பில் இவர் எழுதப் போகும் புத்தகமும் புயலைக் கிளப்பும் என்று தெரிகிறது.
ஸ்பெக்ட்ரம்' ஊழல்-ராசா புகாருக்கு பாஜக மறுப்பு:
இந் நிலையில் பாஜக ஆட்சியில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடிக்கு அளவுக்கு ஸ்பெக்டரத்தை இலவசமாகத் தந்து ஊழல் நடந்துள்ளதாக தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ராசா கூறியுள்ள குற்றச்சாட்டை அக் கட்சி மறுத்துள்ளது.
அதன் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில்,
ஸ்பெக்ட்ரம்' அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக ராசா மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அவர் எந்த விளக்கமும் அளிக்காமல், பாஜக மீதும், அருண் ஜேட்லி மீதும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்.
நம்பிக்கையற்ற நிலையில் இருக்கும் ராசா இதுபோன்ற தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். அவரை பிரதமர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.
ஆனால், ரூ. 1.6 லட்சம் கோடி அளவுக்கான ஸ்பெக்ட்ரத்தை பாஜக ஏன் செல்போன் நிறுவனங்களுக்கு இலவசமாகத் தந்தது என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதில் தரவில்லை.