பன்றிக் காய்ச்சல்-புனே நகரில் 3 குழந்தைகள் பலி
டெல்லி: புனே நகரில் பன்றிக் காய்ச்சலுக்கு இன்று 3 குழந்தைகள் பலியாயினர். இந்தக் குழந்தைகள் 1 மாதத்தில் இருந்து 4 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
இந்தியாவில் முதன் முதலாக இந்த நகரில் பன்றிக் காய்ச்சலுக்கு உயிர் பலியானது. இந் நிலையில் இன்று 3 பச்சிளம் குழந்தைகள் பலியாகியுள்ளன.
இந்த 3 குழந்தைகளும் ஒரு வாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புனே பிம்ப்ரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அதில் 3 குழந்தைகளுக்கும் பன்றிக் காய்ச்சல் நோய் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இந்த மருத்துவ ரிபோர்ட் வரும் முன்பே 3 குழந்தைகளும் பலியாகிவிட்டனர்.
பரிசோதனை முடிவுகள் தாமதமாக வந்ததால் உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் 3 குழந்தைகளும் பலியானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்மூலம் புனே நகரில் பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications