தீவிரவாதிகளை தாக்கிய ருக்ஷானாவின் வீட்டைத் தாக்கிய தீவிரவாதிகள்
ரஜோரி: ஆயுதம் தாங்கிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை தனி ஒரு பெண்ணாக தாக்கி, அவர்களில் ஒருவரைக் கொன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜம்மு பெண் ருக்ஷானா கெளசரின் வீட்டை கையெறி குண்டுகளை வீசி தீவிரவாதிகள் சேதப்படுத்தினர். ஆனால் அப்போது ருக்ஷானா வீட்டில் இருக்கவில்லை.
இதுகுறித்து ரஜோரி மாவட்ட கலெக்டர் ஜெய்பால் சிங் கூறுகையில், நேற்று இரவு 10.45 மணியளவில் ரஜோரி மாவட்டம் பட்டி கிராமத்தில் உள்ள ருக்ஷானாவின் வீட்டின் மீது கையெறி குண்டுகளை வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஆனால் அப்போது வீட்டில் ருக்ஷானாவோ, அவரது குடும்பத்தினரோ இல்லை.
மிக மிக பாதுகாப்பான இடத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கையெறி குண்டுகள் சரியாக வீட்டில் விழவில்லை. மாறாக வீட்டுக்கு அருகில் விழுந்து வெடித்தன. பின்னர் அங்குள்ள ஒரு மலைக் குன்றில் இருந்தபடி வீட்டை நோக்கி சரமாரியாக தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.
இந்த சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை, காயமடையவும் இல்லை என்றார் அவர்.
ருக்ஷனாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தீவிரவாதிகளால் ஆபத்து நேரிடலாம் என்பதால் ரஜோரி போலீஸ் குடியிருப்பில் அவர்களுக்கு வீடு தரப்பட்டுள்ளது. அங்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ருக்ஷானாவும் அவரது குடும்பத்தினரும் தங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications