தமிழர்களை காலவரையின்றி தங்க வைக்க முடியாது- இந்தோனேசியா
ஜகார்த்தா: படகில் உள்ள 78 இலங்கைத் தமிழர்களை காலவரையின்றி தங்குவதற்கு அனுமதிக்க முடியாது என்று இந்தோனேசியா தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு செல்ல விரும்பி படகில் வந்த 78 இலங்கைத் தமிழர்களை மடக்கிய ஆஸ்திரேலிய சுங்கத்துறையினர் அவர்களை இந்தோனேசியாவுக்குத் திருப்பி அனுப்பி விட்டனர்.
தற்போது மேற்கு ஜாவா கடல் பகுதி துறைமுகத்தில் இந்தத் தமிழர்கள் படகிலேயே தங்கியுள்ளனர். தங்களுக்குப் புகலிடம் கொடுத்தால்தான் இறங்கி வருவோம் என்று கூறி வருகின்றனர்.
இதனால் பெரும் தர்மசங்கடத்தில் இந்தோனேசியாவும், ஆஸ்திரேலியாவும் சிக்கியுள்ளன.
நேற்று அவர்களை நாடு கடத்தப் போவதாக இந்தோனேசிய வெளியுவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெகு பைசாஷ்யா கூறியிருந்தார். இந்த நிலையில், அவர்களை தற்காலிகமாக வேண்டுமானால் தங்க வைக்க முடியும். ஆனால் காலவரையின்றி இங்கு தங்க வைக்கமுடியாது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அகதிகளாக படகில் இருப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்டாலும் கூட அவர்களை தற்காலிகமாகத்தான் இங்கு தங்க வைக்க முடியும். ஆனால் முன்பு போல நிரந்தரமாவோ அல்லது காலவரையின்றியோ தங்க வைப்பது முடியாத காரியம்.
ஒருவேளை அவர்களை அகதிகளாக அங்கீகரிக்காவிட்டால் என்ன செய்வது, அவர்களை எங்கு கொண்டு செல்வது என்பதும் தெளிவாக்கப்பட வேண்டியுள்ளது என்றார் அவர்.
இந்த நிலையில் ஏற்கனவே இந்தோனேசியாவில் தஞ்சம் புகுந்துள்ள 251 பேர் கொண்ட தமிழ் அகதிகள் குழு தொடர்ந்து பல நாட்களாக சிறிய கப்பலில் இருந்தபடி போராட்டம் நடத்தி வருகிறது. அவர்களின் நிலையும் இதுவரை தெளிவாகாமல் உள்ளது. இவர்கள் மேரக் துறைமுகத்தில் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications