முஷாரப் சொத்துக்களை முடக்க கோர்ட் உத்தரவு
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தற்போது லண்டனில் போய் உட்கார்ந்துள்ளார். பாகிஸ்தான் கோர்ட்டில் அவர் மீது வழக்குகள் உள்ளதால் வந்தால் கைது செய்யப்படுவோம் என்பதால் பாகிஸ்தானுக்குத் திரும்பாமல் இருக்கிறார முஷாரப்.
இந்த நிலையில், வட மேற்கு எல்லைப் புற மாகாணத்தில் உள்ள அப்போட்டாபாத் மாவட்ட செஷன்ஸ் கோர்ட், முஷாரப்பை தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்குமாறும், அவர் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுத்தால், சொத்துக்களைப் பறிமுதல் செய்யலாம் என்றும் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
அப்போட்டாபாத் நகரைச் சேர்ந்த ஒருவர் முஷாரப் ஆட்சிக்காலத்தி்ல காணாமல் போனார். இவரை முஷாரப்பின் ஆட்கள்தான் கடத்தி விட்டதாக கூறி அவரது குடும்பத்தினர் முஷாரப் மீது போலீஸில் புகார் கொடுத்தனர். இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸ் தரப்பில் நோட்டீஸ் அனுப்பியும் முஷாரப் வரவில்லை.
இதையடுத்து அந்த வாலிபரின் குடும்பத்தினர் கோர்ட்டை அணுகினர். இதை விசாரித்த கோர்ட், முஷாரப் விசாரணைக்கு ஒத்துழைப்பு தராவிட்டால் அவரை தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கலாம். அவரது சொத்துக்களையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என போலீஸாருக்கு உத்தரவிட்டது.