ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் - சிரஞ்சீவியுடன் காங். கூட்டணி
ஹைதராபாத்: கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியுடன், காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளது.
நவம்பர் 23ம் தேதி கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் சிரஞ்சீவி கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
சிரஞ்சீவியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக காங்கரிஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சீனிவாஸ் மற்றும் சிரஞ்சீவியின் மச்சான் அல்லு அரவிந்துக்கும் இடையே ரகசியப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.
சிரஞ்சீவி கட்சியுடன் கூட்டணி அமைக்க கட்சியின் மேலிடப் பொறுப்பாளரும், மத்திய அமைச்சரும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான வீரப்ப மொய்லி மற்றும் முதல்வர் ரோசய்யா ஆகியோரும் இசைவு தந்து விட்டனராம்.
தற்போது தனது குடும்பத்துடன் கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் சிரஞ்சீவி. தனது இசைவை அவரும் தொலைபேசி மூலமாக சீனிவாசிடம் தெரிவித்து விட்டாராம்.
இன்று ஹைதராபாத் திரும்புகிறார் சிரஞ்சீவி. வந்தவுடன் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது குறித்த சீனிவாசுடன் அதிகாரப்பூர்வமாக பேச்சு நடத்தவுள்ளார் என்று பிரஜா ராஜ்ஜியம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ராஜசேகர ரெட்டியின் மறைவால் கட்சிக்கு சற்றுப் பலவீனம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது. மேலும், ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் முழு அளவில் கை கொடுப்பார்களா என்ற சந்தேகமும் உள்ளது. எனவேதான் ரிஸ்க் எடுக்காமல், சிரஞ்சீவி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அதேசமயம், சிரஞ்சீவி கட்சியும் நாளுக்கு நாள் தேய் பிறையாகி வருகிறது. கட்சி கரைந்து போய் விடாமல் காக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் சிரஞ்சீவி. இதனால்தான் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து கட்சியைக் காப்பாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications