தேவர் ஜெயந்தி - போஸ்டர் ஓட்டிய தகராறில் ஒருவர் கொலை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கிரேன் ஆப்ரேட்டர் கொலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சவுண்ட் சர்வீஸ் உரி்மையாளர் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியில் வாகைக்குளம் அருகே உள்ள பேரூரணி ஊனமுற்றோர் காலனியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கணேசன். இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் தனியார் கம்பெனியில் கிரேன் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். தினமும் ஊரிலிருந்து வேலைக்கு சென்று வருவது வழக்கம்.
தூத்துக்குடி கேவிகே நகரில் உள்ள பாட்டி வீட்டிற்கும் கணேசன் அடிக்கடி செல்வார். கடந்த ஆண்டு தேவர் ஜெயந்தியின் போது கேவிகே நகரில் கணேசன் வாழ்த்து போஸ்டர் ஓட்டினார். அதே பகுதியை சேர்ந்த சவுண்ட் சர்விஸ் உரிமையாளர் கடை அருகிலும் கணேசன் போஸ்டர் ஓட்டியதாக தெரிகிறது.
இதை பார்த்த சந்தனகுமார் அவரிடம் தகராறு செய்துள்ளார். அவர்களை அங்குள்ளவர்கள சமரசப்படுத்தினர்.
இந்நிலையில் நேற்று தேவர் ஜெயந்தியை ஓட்டி கணேசன் தூத்துக்குடியிலிருந்து பசும்பொன் கிராமத்துக்கு நண்பர்களுடன் காரில் சென்று விட்டு இரவு 9.30 மணி அளவில் தூத்துக்குடி திரும்பினார்.
பாட்டி வீட்டிற்கு செல்வதற்காக கேவிகே நகரில் நடந்து சென்றபோது அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் அவரை வழிமறித்து சராமரியாக வெட்டியது.
இதில் கணேசன் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். தகவல் அறிந்ததும் எஸ்பி செந்தில்குமார், மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் மற்றும போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக சவுண்ட்ஸ் சந்தனகுமார், அதே பகுதியை சேர்ந்த பாலா என்ற பாலகிருஷ்ணன், மதன், மூனிஸ் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications