திருச்சியில் எஸ்.ஐ. - ஏட்டு கட்டிப்புரண்டு சண்டை
திருச்சி: விடுப்பு தராததால் கோபமடைந்த, குடிபோதையில் இருந்த திருச்சி மாநகர ஆயுதப்படை தலைமைக் காவலர், சப் இன்ஸ்பெக்டருடன் கட்டிப் புரண்டு சண்டை போட்டார்.
திருச்சி மாநகர ஆயுதப்படையில் ஏட்டாக இருப்பவர் சரவணன் (35). இவருக்கு கடந்த 27 ம் தேதி முதல் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் பணி வழங்கப்பட்டது. அங்கு பணி செய்ய விருப்பம் இல்லாத சரவணன், நேற்று காலை குடிபோதையில் வந்து விடுமுறை வழங்குமாறு ஆயுதப்படை எஸ்.ஐ. ஆரோக்கியதாசிடம் வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர், மறுத்துள்ளார்.
இதனால் அவர்கள் இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. மேலும், இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். இதில் அதிர்ச்சி அடைந்த சக காவலர்கள், உயர் அதிகாரிகள் இருவரையும் விலக்கினர்.
இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ. ஆரோக்கியதாஸ் புகார் அளித்தார். அதன் பேரில் காவலர் சரவணன் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.