முல்லைப் பெரியாறு- மதுரையில் நவ. 14ல் வைகோ உண்ணாவிரதம்
மதுரை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய மற்றும் கேரள அரசுகளை கண்டித்து மதுரையில் மதுரையில் நவம்பர் 14ம் தேதி எனது தலைமையில் உண்ணாவிரதம் நடைபெறும் என்று ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ தெரிவித்தார்.
இது குறித்து மதுரையில் ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ கூறுகையில்,
முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணைக்கான கேரள அரசின் ஆய்வு துவங்கிய போது, தமிழக முதல்வர் அதனை வதந்தி என தட்டிக்கழித்தார்.
பின்பு, ஆய்வுக்கு அனுமதியளித்த மத்திய அமைச்சரை கண்டித்து மதுரையில் பொதுக் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். ஆனால், அதிலிருந்து நழுவி புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். இப்போது கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இது மக்களை ஏமாற்றும் செயல்.
தென் மாவட்ட மக்களின் ஜீவாதார பிரச்னையாக முல்லைப் பெரியாறு அணை விவகாரம் உள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு வஞ்சகம் செய்து விட்டது.
முல்லை பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து கேரளா அரசை கண்டித்தும் தேனியில் நவம்பர் 8 ம் தேதி அன்று பொதுக் கூட்டம் நடைபெறும்.
அதே போன்று மதுரையில் நவம்பர் 14 ம் தேதி எனது தலைமையில் உண்ணாவிரதம் நடைபெறும். இதில் பொது மக்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொள்வார்கள் என்றார்.