5வது நாளாக எரியும் தீ-நஷ்டம் ரூ. 1,000 கோடி!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இந்தியன் ஆயில் நிறுவன எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீ 5வது நாளாக இன்றும் எரிந்து கொண்டுள்ளது.
மொத்தமுள்ள 11 பிரமாண்ட பெட்ரோலிய சேமிப்பு டேங்குகளில் இப்போது 2ல் தீ எரிந்து கொண்டுள்ளது. நாளைக்குள் அதில் உள்ள எரிபொருள் முழுவதும் எரிந்துபோய், தீ எரிவது நின்றுவிடும் என்று தெரிகிறது.
இந்த தீ விபத்தில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். பலர்
காயமடைந்த கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5 நாட்களாக எரிந்த தீயால் அந்த பகுதியின்பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அசுத்தமான புகை சூழ்ந்துள்ளது. இப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல், தோல் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன.
தீ எரியும் இடத்துக்கு அருகே ரயில்வே பாதை உள்ளது. இந்த வழியாக செல்லும் 12 ரயில்கள் கடந்த 5 நாட்களாக மாற்று பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.
இந்த தீ விபத்தால் பெட்ரோலியத்துறைக்கு ரூ. 1,000 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.