போராட்டக் குழு கலைப்புக்கு எதிர்ப்பு-உயர்நீதிமன்ற வக்கீல்கள் மோதல்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட போராட்டக் குழுவைக் கலைப்பதை எதிர்த்து ஒரு பிரிவு வக்கீல்கள் மோதலில் ஈடுபட்டதால் உயர்நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் மூண்டது. இதில் வக்கீல்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்காக வக்கீல்கள் சங்க தலைவர் பால்கனகராஜ் தலைமையில் போராட்டக் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் சந்திரமோகன், தமிழ்நாடு வக்கீல்கள் சங்க தலைவர் பிரபாகரன், மூத்த வக்கீல்கள் காந்தி, ஏ.நடராஜன், என்.ஜி.ஆர்.பிரசாத், வைகை மற்றும் அனைத்து மாவட்ட வக்கீல் சங்க தலைவர்கள் உள்பட 22 பேர் இடம் பெற்றிருந்தனர்.
இந்தக் குழுவினர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் உயர்நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பை அளித்தது. நான்கு காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற பெஞ்ச், வக்கீல்களையும் கடுமையாக கண்டித்து பல்வேறு அறிவுரைகளையும் வழங்கியிருந்தது.
இந்த நிலையில் வக்கீல்கள் போராட்டக்குழு கூட்டம் தமிழ்நாடு பார்கவுன்சில் கட்டிடத்தில் இன்று காலை நடந்தது. உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்க தலைவர் பால்கனகராஜ் தலைமையில் போராட்டக்குழுவை சேர்ந்த 14 பேர் கலந்து கொண்டனர்.
கூட்டம் நடைபெற தொடங்கியதும் போராட்டக்குழுவை கலைப்பது பற்றி பேசப்பட்டது.
அப்போது குழுவை கலைக்க எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் சங்க செயலாளர் மோகனகிருஷ்ணன், அப்துல் ரகுமான் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் அங்கு திரண்டனர். அவர்கள் போராட்டக்குழுவை கலைக்கக்கூடாது என்று கோஷம் போட்டனர். இதனால் இருருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் கூட்டம் நடைபெறும் அறையை விட்டு வெளியே வந்து பார்கவுன்சில் வாசல் முன்பு நின்று கோஷம் எழுப்பினார்கள். இதை சில வக்கீல்கள் தட்டிக் கேட்டனர். எனவே 2 தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானது.
ஆனாலும் போராட்டக்குழு கூட்டம் கட்டிடத்தின் உள்ளே தொடர்ந்து நடைபெற்றது. அதில், போராட்டக்குழுவை தொடர்ந்து நடத்துவது, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முன்னாள் போலீஸ் கமிஷனர் உள்பட 4 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது என்பது உள்பட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வக்கீல்கள் இடையே ஏற்பட்ட இந்த மோதலால் உயர்நீதிமன்ற பார் கவுன்சில் அருகே பரபரப்பு நிலவியது.