காவலர்கள் மீது நடவடிக்கை கூடாது-நலச் சங்கம்
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற மோதல் தொடர்பாக, அன்று பணியில் ஈடுபட்டிருந்த எந்த ஒரு காவலர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு காவலர் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
உயர் நீதிமன்ற வளாகத்தில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதில் மோதல் சம்பவத்துக்கு அப்போதைய மாநகரப் போலீஸ் கமிஷனராக இருந்த கே. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 போலீஸ் அதிகாரிகளே பொறுப்பு என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தடியடியில் ஈடுபட்ட காவலர்கள் குறித்த விவரங்களை தருமாறு மாநகரப் போலீஸாருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், காவலர் நலச் சங்கத்தின் நிறுவனரும் முன்னாள் போலீஸ் அதிகாரியுமான அந்தோணிசாமி கூறுகையில், உயர் நீதிமன்ற மோதல் மட்டுமல்ல அது போன்ற எந்த சூழலிலும் தலைமை வகிக்கும் அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை அப்படியே நிறைவேற்றுவதுதான் காவலர்களின் பணியாக உள்ளது.
காவல் துறையை பொறுத்தவரை இதுவே கட்டுப்பாடாக கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தகைய சூழலில் அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்படியாவிட்டால் அந்த காவலர்கள் கடமை தவறியவர்களாக கருதப்பட்டு நடவடிக்கைக்கு ஆளாகக்கூடும்.
எனவே, தலைமையின் உத்தரவை நிறைவேற்றிய காரணத்துக்காக காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு வழிவகுத்து விடக் கூடாது.
அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் அது காவலர்களிடம் தங்கள் அதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்படிவது குறித்த கேள்வியை எழுப்பும். இது காவல் துறையின் கட்டுப்பாட்டை சீர்குலைத்துவிடும்.
உயர் நீதிமன்ற மோதல் சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர்கள் மீது காவலர் நலச்சங்கம் அளித்த புகார் மீது அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் முடிவு விரைவில் வெளியாக உள்ளது. அதன் பிறகே, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து காவலர் நலச்சங்கம் முடிவு செய்யும் என்றார்.