கள்ளப் பணம்- ஸ்விஸ் அதிகாரிகளை சந்திக்கும் பிரணாப்
டெல்லி: ஸ்விஸ் வங்கிகளில் குவிந்து கிடக்கும் இந்தியர்களின் கள்ளப் பணத்தை வெளிக் கொணருவதற்காக ஸ்விஸ் நாட்டு அதிகாரிகளை சந்திக்கிறார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.
டிசம்பர் மாதம் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. அப்போது இரு நாடுகளுக்கும் இடையே புதிய ஒப்பந்தத்தை உருவாக்கிக் கொள்வது தொடர்பாக முக்கியமாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
இந்த உடன்படிக்கையின் மூலம் ஸ்விஸ் வங்கிகளில் குவிந்து கிடக்கும் பல ஆயிரம் கோடி பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர வழி ஏற்படும்.
ஸ்விஸ் வங்கிகள் தவிர இதேபோன்ற வரிவிதிப்பு இல்லாத பிற நாட்டு வங்கிகளில் குவிந்து கிடக்கும் இந்தியப் பணத்தையும் வெளிக் கொணர முடியும்.
இதுகுறித்து பிரணாப் முகர்ஜி கூறுகையில், டிசம்பர் முதல் வாரத்தில் இந்த சந்திப்பு நடைபெறும். 10-11 ஆகிய தேதிகளில் இந்த சந்திப்பு நடைபெறும்.
எவ்வளவு பணம் அங்கு இருக்கிறது என்பது குறித்து 1985ம் ஆண்டுதான் கணக்கிடப்பட்டது. அதன் பிறகு இதுகுறித்து கணக்கிடப்படவில்லை. எனவே எவ்வளவு பணம் இருக்கிறது என்ற கணக்கு தற்போது அரசிடம் இல்லை என்றார் பிரணாப்.
ஆனால், கிட்டத்தட்ட ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 75 ஆயிரம் கோடி வரை ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் குவிந்து கிடப்பதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி ஏற்கனவே கூறியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.