மகாராஷ்டிரத்தில் ஜனாதிபதி ஆட்சி: பாஜக-சிவசேனா கோரிக்கை
மும்பை: மகாராஷ்டிரத்தில் அமைச்சர்கள், துறைகளை பங்கிட்டுக் கொள்வதில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடையே மோதல் முடிவுக்கு வராததால் தேர்தல் முடிவுகள் வெளியாகி 14 நாட்கள் கடந்துவிட்ட பின்னரும் இன்னும் ஆட்சி அமையவில்லை.
இதையடுத்து மகாராஷ்டிரத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமலாக்குமாறு பாஜக, சிவசேனா கூட்டணி கோரியுள்ளது.
இன்று ஆளுநர் ஜமீரை சந்தித்த பாஜக, சிவசேனா எம்எல்ஏக்கள் இது தொடர்பாக மனுவும் கொடுத்தனர்.
முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரசைச் சேர்ந்த அசோக் சவான், துணை முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த சகன் புஜ்பல் ஆகியோரை நேற்று நேரில் அழைத்த ஆளுநர் அரசியல் சட்ட சி்க்கலைத் தீர்க்க சிறிய அமைச்சரவையுடன் இரண்டு நாட்களுக்குள் பதவியேற்குமாறும், அமைச்சரவைக் கூட்டம் நடத்தி சட்டசபையைக் கூட்டுமாறும் அறிவுரை வழங்கினார்.
பிரச்சனை தீர்ந்த பின்னர் அமைச்சரைவையை விரிவுபடுத்திக் கொள்ளுமாறும் ஆலோசனை தந்தார்.
ஆனால் வளம் கொழிக்கும் துறைகள் யாருக்கு என்பதில் தீவிர சண்டையில் உள்ள காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் விட்டுக் கொடுக்கும் மனநிலையில் இல்லை.
பிரச்சனை தீரும் வரை காங்கிரஸ் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரப் போவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளதால் சி்க்கல் மேலும் அதிகமாகியுள்ளது.
வெளியில் இருந்து ஆதரவு என்றால் அரசை சில மாதங்கள் நடத்துவதே சிரமமாகிவிடும் என்று காங்கிரஸ் கருதுகிறது.
மொத்தம் உள்ள 288 இடங்களில் காங்கிரஸ் 82 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 62 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
இதற்கிடையே 11வது மராட்டிய சட்டசபையின் ஆயுட்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.