லோக்கல் கால் 10 பைசா-எஸ்டிடி 25 பைசா!
டெல்லி: நாடு முழுவதும் செல்போன் கட்டணங்கள் மேலும் குறையவுள்ளன.
லோக்கல் கால் நிமிடத்துக்கு 10 பைசாவாகவும், எஸ்டிடி கட்டணம் நிமிடத்துக்கு 25 பைசாவாகவும் குறைய உள்ளது.
இப்போது நிலவும் கடும் போட்டி காரணம் ஒரு வினாடிக்கு ஒரு பைசா என்ற அளவுக்கு கட்டணங்கள் சரிந்துவிட்டன. ஆனால், டெர்மினேசன் சார்ஜ் என்று சொல்லி ஒரு கட்டணத்தை செல்போன் நிறுவனங்கள் மக்களிடம் சுருட்டி வருகின்றன.
இதனால் வெளியில் வினாடிக்கு 1 பைசா தான் என்று சொன்னாலும் கூடுதலாகக் கட்டணத்தை வசூலித்து வருகின்றனர்.
டெர்மினேசன் சார்ஜ் என்பது ஒரு செல்போன் நிறுவனத்தின் தொலைபேசியில் இருந்து அடுத்த நிறுவனத்தின் செல்போனுக்குத் தொடர்பு கொள்ளும்போது வசூலிக்கப்படும் கட்டணமாகும்.
இந்தக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா கூறியுள்ளார். நேற்று செல்போன் நிறுவன செயல் அதிகாரிகள் கூட்டத்தி்ல் பேசிய ராஜா, இந்தக் கட்டணத்தை உடனே குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார்.
இது 2010க்குள் நடைமுறைக்கு வந்தாக வேண்டும் என்று ராசா கூறியதாகத் தெரிகிறது.
இது நடந்தால் லோக்கல் கால் நிமிடத்துக்கு 10 பைசாவாகவும், எஸ்டிடி கட்டணம் நிமிடத்துக்கு 25 பைசாவாகவும் குறையும்.
மேலும், செல்போன் சேவை தொடங்க சமீபத்தில் லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் 3 மாதங்களுக்குள் சேவையைத் தொடங்காவிட்டால் கடும் அபாரதம் விதிக்கப்படும் என்றும், லைசென்ஸே ரத்தாகும் என்றும் ராசா எச்சரித்தார்.
இது தவிர கிராமப் பகுதிகளில் செல்போன், இன்டர்நெட் உள்ளிட்ட சேவைகளை அதிகளவில் ஊடுருவச் செய்ய உருவாக்கப்பட்டுள்ள நிதியத்துக்கு ஆண்டுதோறும் செல்போன் நிறுவனங்கள் தங்கள் வருவாயில் 5 சதவீதத்தை ஒதுக்கி வருகின்றன. இந்த நிதி ரூ. 25,000 கோடி அளவுக்கு சேர்ந்துள்ளது. இந்த நிதியை எப்படி முறையாக செலவிடலாம் என்பது குறித்தும் செல்போன் நிறுவன அதிகாரிகளுடன் ராசா விவாதித்தார்.












Click it and Unblock the Notifications