காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்தது- தென் மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும்

வங்கக்கடலின் தென் மேற்கு பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் தீவிரம் அடைந்து வருகிறது.
இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மேலும் 24 மணி நேரம் மழை நீடிக்கும். கடலோர மாவட்டங்களில் இடிமின்னலுடன் பலத்த மழை பெய்யும்.
தென் மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப் படும். சில பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
ராமேஸ்வரத்தில் கன மழை..
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 8 செமீ மழை பெய்துள்ளது.
மயிலாடுதுறை, தரங்கம்பாடியில் தலா 6 செமீ மழை, திருத்துறைப்பூண்டி, சீர்காழி, பாம்பன், ராமநாதபுரத்தில் தலா 4 செமீ, பூண்டி, திருத்தணி, காட்டுமன்னார்கோவில், உளுந்தூர்ப்பேட்டை, புதுச்சேரி, நாகை, ஆரணி, கோத்தகிரி ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழையும் பெய்துள்ளது.
சென்னையில் மழை...
இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நகரமே குளிர்ந்து ஈரக் காடாகியுள்ளது.
நகரின் பல பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புறநகர்ப் பகுதிகளில் குளிர்காற்றுடன் மழை பெய்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications