புது மணப்பெண்னை கழுத்தறுத்து கொன்ற கள்ளக்காதலன்
திருச்சி: திருமணமான மூன்று மாதங்களிலேயே கள்ளக் காதலனுடன் தங்கியிருந்த பெண், கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி லால்குடி கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் அன்பரசி (21). அதே பகுதியை சேர்ந்த பால் வியாபாரி முத்துக்குமாருடன் கடந்த ஜூலை மாதம் அன்பரசிக்கு திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த மூன்று மாதங்களிலேயே, திருச்சி முத்தரசநல்லூரைச் சேர்ந்த அங்கமுத்து என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார் அன்பரசி. கணவர் முத்துக்குமாருக்கு தெரியாமல் பலமுறை திருச்சிக்கு சென்று அங்கமுத்துவுடன் தங்கி வந்துள்ளார்.
இதற்கிடையே, முத்துக்குமாருக்கு அன்பரசியின் கள்ளத்தொடர்பு தெரிய வந்தது. இதனால், கடந்த 27ம் தேதி முத்துக்குமாரின் வீட்டிலிருந்து வெளியேறிய அன்பரசி, திருச்சிக்கு சென்று அங்கமுத்து வீட்டில் தங்கிவிட்டார். ஆனால், அங்கமுத்துவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது அன்பரசிக்கு பின்னர் தான் தெரியவந்தது.
இதனால், கணவனை உதறிவிட்டு வந்த தன்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ள வேண்டுமென அன்பரசி, அங்கமுத்துவிடம் நச்சரிக்கத் தொடங்கினார். ஆத்திரமடைந்த அங்கமுத்து, கடந்த 30ம் தேதி, அன்பரசியின் கழுத்தில் துப்பட்டாவை போட்டு இறுக்கினார். அன்பரசி மூச்சு திணறி இறந்தார். அன்பரசியின் பிணத்தை தன் வீட்டின் அருகே உள்ள தோப்பில் குழி தோண்டி புதைத்துவிட்டார் அங்கமுத்து.
இதற்கிடையே, முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில், லால்குடி போலீசார் அன்பரசியை தேடிக் கொண்டிருந்தனர். கடந்த திங்கள்கிழமை அன்பரசியின் உடலை போலீசார் கண்டுபிடித்தனர். போலீசார் அங்கமுத்துவை கைது விசாரித்து வருகின்றனர்.