ஹைதராபாத்தில் 21 வயது குத்துச்சண்டை வீராங்கனை மர்ம மரணம்
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான அமராவதி என்ற குத்துச் சண்டை வீராங்கனை, ஹைதராபாத் லால் பகதூர் ஸ்டேடிய விடுதி அறையில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார்.
பயிற்சியாளரின் கடுமையான போக்கால்தான் தங்களது மகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அமராவதியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால் போட்டியில் வெல்ல மாட்டோம் என்ற நம்பிக்கையின்மையால்தான் அமராவதி தற்கொலை செய்து கொண்டிருப்பதாக விடுதி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அமராவதி பிணமாகக் கிடந்த அறை முழுவதும் வாந்தி எடுத்த அடையாளம் காணப்படுகிறது. பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே அமராவதி எப்படி இறந்தார் என்பது தெரிய வரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை காலை வழக்கமான பயிற்சிக்கு அமராவதி வரவில்லை. இதையடுத்து விடுதி வார்டன் கமலா குமாரி, அமராவதியின் அறைக்கு சென்றார். ஆனால் அறை உள்புறமாக பூட்டிக் கிடந்தது.
இதையடுத்து விடுதி ஊழியர்களை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அமராவதி பிணமாக படுக்கையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ந்தார்.
வழக்கமாக அமராவதியுடன் கமலாவும் இரவு படுத்துத் தூங்குவாராம். ஆனால் செவ்வாய்க்கிழமை இரவு அவர் படுக்க வரவில்லை. தனது அறையிலேயே அவர் படுத்துக் கொண்டாராம்.
இதனால் அமராவதி தனியாகவே படுத்துத் தூங்கியுள்ளார். தனது சாப்பாட்டில் ஏதாவது விஷத்தைக் கலந்து அமராவதி சாப்பிட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
அமராவதி ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். ஜூனியர் தேசிய குத்துச் சண்டை பட்டத்தை வென்றழர். 2004ல் நடந்த தென்னிந்திய மகளிர் குத்துச் சண்டைப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 2006ல் நடந்த சீனியர் தேசிய குத்துச் சண்டைப் போட்டியில் வெண்கலம் வென்றார்.
இவரது பயிற்சியாளராக இருப்பவர் ஓம்கார் யாதவ். இவர் தங்களது மகளை சித்திரவதைப்படுத்தி வந்ததாகவும், சமீபத்தில் ஒரு தோல்வியை தங்களது மகள் சந்தித்ததால், அவரை கடுமையாக திட்டியதாகவும், இதனால்தான் மனம் உடைந்து அமராவதி தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அமராவதியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.