செப்-அக்டோபர் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை: கடந்த செப்டம்பர்-அக்டோபர் மாதம் நடந்த பிளஸ்டூ தனித் தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை நவம்பர் 9ம் தேதி முதல் நவம்பர் 11ம் தேதி வரை தேர்வெழுதிய மையங்களிலேயே நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
சிறப்பு அனுமதி (தட்கல்) திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் அவர்களது வீட்டு முகவரிக்கு பதிவஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.
எந்தவொரு பாடத்திற்கும் அச்சுப் பகர்ப்பு நகல் (ஜெராக்ஸ்) கோரியோ அல்லது மறு கூட்டல் கோரியோ விண்ணப்பிக்கலாம். மறு கூட்டல் மற்றும் அச்சுப் பகர்ப்பு நகல் கோரும் விண்ணப்பங்கள் நவம்பர் 11ம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்கள், இணை இயக்குநர் (கல்வி), புதுச்சேரி மற்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் சென்னை-6 ஆகிய இடங்களில் அலுவலக நேரங்களில் விநியோகம் செய்யப்படும்.
மறுகூட்டல் மற்றும் அச்சுப் பகர்ப்பு நகல் விண்ணப்பங்கள் வாங்க விரும்புபவர்கள் அதற்குரிய கட்டணத்தை Director of Government of Examinations, Chennai-6 என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலையாக சமர்ப்பித்து விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, விண்ணப்பத்தைப் பெற்ற அலுவலகத்திலேயே நவம்பர் 13ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
அச்சுப் பகர்ப்பு கட்டணமாக மொழித்தாள்களுக்கு ரூ.550ம், இதர பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.275ம், மறுகூட்டலுக்கு மொழித்தாள்கள் மற்றும் உயிரியல் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.305ம், மற்ற பாடங்களுக்கு ரூ.205ம் கட்டணத்தை வங்கி வரைவேலையாகச் செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.