நியூஜெர்சி, விர்ஜீனியா ஆளுநர் தேர்தலில் ஒபாமா கட்சி தோல்வி
வாஷிங்டன்: அமெரிக்காவின் விர்ஜீனியா மற்றும் நியூஜெர்சி மாகாண ஆளுநர் தேர்தலில் அதிபர் பாரக் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி தோல்வி அடைந்துள்ளது. இதனால் ஒபாமா ஆதரவாளர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
அதிபர் தேர்தலின்போது நியூஜெர்சியில்தான் ஜனநாயகக் கட்சிக்கு பெருமளவில் வாக்குகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் ஒபாமா தரப்பை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
விர்ஜீனியா மாகாண தேர்தலில் எதிர்கட்சியான குடியரசுக் கட்சி வேட்பாளர் பாப் மெக்டனால் வெற்றி பெறுவது உறுதி என ஏற்கனவே கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம், நியூஜெர்சியில் இரு கட்சி வேட்பாளர்களும் சம நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இரு இடங்களிலும் தற்போது ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
விர்ஜீனியாவில் குடியரசுக் கட்சி வேட்பாளர் பாப் மெக்டொனால் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் கிரேக் டீட்ஸை எளிதில் வீழ்த்தினார்.
நியூ ஜெர்சியில் குடியரசுக் கட்சியின் கிறிஸ் கிறிஸ்டி கடும் போட்டிக்கு மத்தியில், தற்போதைய ஆளுநரான ஜனநாயகக் கட்சியின் ஜான் கோர்ஸைனை வென்றார்.
ஒபாமா அதிபராக பதவியேற்று ஒரு வருட காலத்திற்குள்ளேயே இந்த நிலை ஏற்பட்டிருப்பது ஜனநாயகக் கட்சியினரிடையே கவலையை தோற்றுவித்துள்ளது.
என்ன காரணம்...?
அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது அமெரிக்க மக்களுக்கு அளித்த பல வாக்குறுதிகளை ஒபாமா நிறைவேற்றத் தவறியதே அவரது கட்சியின் தோல்விக்குக் காரணமாக கருதப்படுகிறது.
குறிப்பாக 3 முக்கிய வாக்குறுதிகளை அமெரிக்க வர்க்கத் துறையினர் எடுத்து வைக்கிறார்கள்.
- தனது பிரசாரத்தின்போது சிறிய வர்த்தக நிறுவனங்களுக்கு பெருமளவில் பிசினஸ் காண்டிராக்டுகளைத் தர வேண்டும். பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே அவற்றைத் தொடர்ந்து தரக் கூடாது. நான் ஆட்சிக்கு வந்தால் இதை சட்டத் திருத்தம் மூலம் அமல்படுத்துவேன் என்று கூறியிருந்தார் ஒபாமா. ஆனால் இது நாள் வரை அப்படி எந்த சட்டத் திருத்தத்தையும் அவர் கொண்டு வரவில்லை.
இதன் காரணமாக கிட்டத்தட்ட 29 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான காண்டிராக்டுகள் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே போயுள்ளன. ஒபாமா தனது பதவியில் ஓராண்டை முடிக்கும்போது இது 100 பில்லியன் டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
- பெண்களைத் தலைவர்களாக கொண்டு நிர்வகிக்கப்படும் நிறுவனங்களுக்கு அரசின் காண்டிராக்ட் ஒதுக்கீடுகளில் 5 சதவீதம் அளிக்கப்படும் என்று கூறியிருந்தார் ஒபாமா. ஆனால் இதுவரை அப்படி ஒரு திட்டத்தை அவர் அமல்படுத்தவே இல்லை.
- சிறுபான்மையினருக்கான அரசின் உதவி நிதித் திட்டத்தை தற்போது நிறுத்த உத்தரவிட்டுள்ளார் ஒபாமா. மேலும், சிறுபான்மையினருக்கான அரசின் காண்டிராக்டுகளை வெறும் 5 சதவீதமாக குறைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது ஒபாமா சார்ந்த ஆப்பிரிக்க - அமெரிக்கர்கள்தான். ஒபாமாவின் உத்தரவால், ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்க அமெரிக்க சிறு தொழில் முனைவோர் தங்களது நிறுவனங்களையே மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனராம்
இரு மாகாண ஆளுநர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி தோல்வியைச் சந்தித்திருப்பது ஒபாமாவுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அவரது செல்வாக்கு சரிந்து விட்டதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.