ரெட்டிகளுடன் சமரசத்திற்கு தயார் எதியூரப்பா - முதல் வேலையாக செயலாளர் மாற்றம்
டெல்லி: ரெட்டி சகோதரர்களுடன் சமாதானமாகப் போக கர்நாடக முதல்வர் எதியூரப்பா தயாராகி விட்டார். முதல் நடவடிக்கையாக தனது செயலாளரை அவர் மாற்றியுள்ளார்.
ரெட்டி சகோதரர்கள் எனப்படும் கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி, சோமசேகர ரெட்டி மற்றும் அவர்களது உறவினரான ஸ்ரீராமுலு ஆகியோர் தலைமையிலான கோஷ்டி, கர்நாடக அரசியலை கடந்த சில நாட்களாக ஸ்தம்பிக்க வைத்து வருகிறது.
எதியூரப்பாவை மாற்றியே ஆக வேண்டும் என்று அவர்கள் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் எதியூரப்பாவை மாற்ற முடியாது என்று பாஜக மேலிடம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
அதேசமயம், இரு தரப்புக்கும் சாதகமான ஒரு பார்முலாவை வெங்கையா நாயுடுவை வைத்து தயாரித்து இரு தரப்பிடமும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், எதியூரப்பா தற்போது மேலும் இறங்கி வந்துள்ளார். பிரச்சினையை சுமூகமாக முடிவுக்குக் கொண்டு வர சில அமைச்சர்களை நீக்குவது, சிலருடைய இலாகாக்களை மாற்றுவது, அதேபோல சில அதிகாரிகளை இடம் மாற்றுவது என்ற முடிவுக்கு எதியூரப்பா ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எந்தப் பிரச்சினையாக இருந்தாலம், கட்சியின் அகில இந்தியத் தலைவர்கள் எனக்கு எந்த உத்தரவை இடுகிறார்களோ அதை ஏற்க நான் கடமைப்பட்டுள்ளேன். அதை அவர்களிடமே சொல்லியும் விட்டேன்.
அதேசமயம், தற்போது பாஜக அமைச்சரவையின் தலைமைப் பொறுப்பில் (முதல்வர் பொறுப்பு) எந்த மாற்றமும் இருக்காது என்றார் எதியூரப்பா.
எதியூரப்பாவின் செயலாளர் மாற்றம்..
எதியூரப்பா சமரசத்திற்கு தயாராகியிருப்பதை உறுதி செய்யும் விதமாக, முதல்வரின் செயலாளராக இருந்து வந்த பாலிகர் மாற்றப்பட்டு அவருக்குப் பதில் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாலிகரை மாற்ற வேண்டும் என ரெட்டி சகோதர்கள் கூறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.