ஹெட்லி கைதைத் தொடர்ந்து பாக்.கில் 2 பேர் கைது - ப.சிதம்பரம்

எப்.பி.ஐயின் உத்தரவின் பேரில் இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சிதம்பரம் கூறினார்.
இதுகுறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத் தாக்குதல் திட்டம் தீட்டிக் கைதாகியுள்ள அமெரிக்கர் டேவிட் கோல்மேன் ஹெட்லிக்கு, பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது உறுதியாகியுள்ளது.
அதேபோல இந்த சதித் திட்டத்தில் பாகிஸ்தானின் தொடர்பும் நிச்சயமாக உள்ளது. பாகிஸ்தானுக்கு கோல்மேன் பலமுறை போயுள்ளார். எப்பிஐயின் அறிவுரைப்படி தற்போது 2 அல்லது அதற்கு மேற்பட்டோரை பாகிஸ்தான் படையினர் கைது செய்துள்ளனர் என்று எங்களுக்குத் தெரிய வந்துள்ளது என்றார் ப.சிதம்பரம்.
சமீபத்தில் கோல்மேன் மற்றும் பாகிஸ்தானில் பிறந்த கனடா நாட்டு குடிமகன் தவார் ஹூசேன் ராணா ஆகியோரை எப்பிஐ அதிகாரிகள் அமெரிக்காவில் கைது செய்தனர் என்பது நினைவிருக்கலாம்.
மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்படவில்லை...
தொடர்ந்து ப.சிதம்பரம் கூறுகையில், மத்திய அரசு மாவோயிஸ்டுகளுக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இதுதொடர்பான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவி வருகிறது, அவ்வளவுதான்.
மத்திய அரசுத் தரப்பிலிருந்து மாவோயிஸ்டுகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் திட்டமிடப்படவில்லை. நக்சலைட்டுகளை ஒழிக்கும் வேலையை மாநில அரசுகள் செய்து வருகின்றன. அதற்கு மத்திய அரசு உதவி செய்கிறது. மாநிலங்களின் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசுகளின் வேலை என்றார் ப.சிதம்பரம்.












Click it and Unblock the Notifications