தலாய் லாமா நாளை அருணாச்சல் பயணம்- வரவேற்க காத்திருக்கும் தவாங்
பனி படர்ந்த மலைகளுக்கு நடுவில், கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள பகுதிதான் தவாங். அருணாச்சல் பிரதேசத்தின் முக்கியப் பகுதியான தவாங் பிரதேசத்தில் தலாய் லாமா நாளை தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார்.
இதையொட்டி தவாங் பகுதி வண்ணமயமாக மாறியுள்ளது. தலாய் லாமாவை வரவேற்று அப்பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திபெத்திய கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கின்றன.
கடந்த 1959ம் ஆண்டு தவாங் வழியாகத்தான் திபெத்திலிருந்து தப்பி இந்தியாவுக்குள் நுழைந்தார் தலாய் லாமா என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இதுவரை அங்கு 5 முறை விஜயம் செய்துள்ளார். தற்போது தனது 6வது சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார்.
தலாய் லாமாவின் வருகையைத் தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக அருணாச்சல் பிரதேசம் குறித்தும், தலாய் லாமாவின் வருகை குறித்தும் சீனத் தரப்பில் ஏகமாக சத்தம் எழுப்பப்பட்டு வருகிறது. மேலும், அருணாச்சல் பிரதேசத்தை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில் சீன ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தலாய் லாமா தவாங் வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.