மது கோடா ஊழலில் மத்திய அமைச்சர் ஒருவருக்குத் தொடர்பு
டெல்லி: முன்னாள் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் மது கோடாவின் டைரியில், மத்திய அமைச்சர் ஒருவரின் பெயரும் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ரூ. 4000 கோடி அளவுக்கு பண முறைகேடு, ஊழல் செய்ததாக பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார் மது கோடா. அவரைக் கைது செய்ய அமலாக்கப் பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், அவரது சொந்த டைரி ஒன்று தற்போது அதிகாரிகள் வசம் சிக்கியுள்ளது. அதில், பலரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அதில், முக்கியமாக மத்திய கேபினட் அமைச்சர் ஒருவரின் பெயரும் இடம் பெற்றிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஞ்சியில் உள்ள மது கோடாவின் வீட்டிலிருந்து இந்த டைரி கைப்பற்றப்பட்டது. அதில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் மத்திய அமைச்சர், மது கோடாவுடன் மிக நெருக்கமாக செயல்பட்டு வந்துள்ளார். ஜார்க்கண்ட் அரசியல் விவகாரங்களிலும் இவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
கோடாவிடமிருந்து இந்த அமைச்சர் பெரும் பணத்தைப் பெற்றுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யார் யாருக்கு கோடா எவ்வளவு பணம் கொடுத்தார் என்ற விவரமும் அதில் இடம் பெற்றுள்ளது.
மேலும் யார் யாரிடமிருந்து கோடா பணம் பெற்றார் என்ற விவரமும் தெளிவாக இடம் பெற்றுள்ளது.
இந்த டைரியில் உள்ள தகவல்களின் மூலம் பெருமளவில் பண மோசடி நடந்திருப்பதாக அதிகாரிகள் கருதுகிறார்கள்.
இந்த டைரியில் மத்திய அமைச்சர் தவிர வேறு பல பெரும் புள்ளிகளின் பெயர்களும் கூட இடம் பெற்றுள்ளனவாம்.
கடந்த நான்கு நாட்களாக நடந்த தொடர் விசாரணையில் ரூ. 375 கோடி பணத்தை ஸ்விஸ் வங்கிகளில் போட்டு வைத்துள்ளதை கோடா ஒப்புக் கொண்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications