4 ஆஸ்திரேலிய கல்லூரிகள் திடீர் மூடல் - இந்திய மாணவர்கள் பாதிப்பு
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நான்கு சர்வதேச கல்லூரிகள் திடீரென மூடப்பட்டு விட்டன. இதனால் இந்தியர்கள் உள்ளிட்ட 2000 சர்வதேச மாணவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இன்னனும் சில வாரங்களில் இறுதியாண்டுத் தேர்வை எழுதவிருந்த நிலையில் இக்கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் பல மாணவர்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களில் இந்த கல்லூரிகள் உள்ளன. நான்கும் தனியார் கல்லூரிகள் ஆகும்.
மெரிடியன் குரூப் நடத்தும் கல்லூரிகள் இவை. இக்கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்களிடம் உங்களுக்கு இனிமேல் வேலை இல்லை என்று கூறி கல்லூரிகளை மூடி விட்டனர். ஆனால் மாணவர்களிடமோ கல்லூரிகளை மூடி விட்ட தகவலைக் கூட கல்லூரி நிர்வாகம் அறிவிக்கவில்லை.
கல்லூரிகளுக்கு வந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தபடி கூடியிருந்தனர்.
மெல்போர்னைச் சேர்ந்த மாணவி ஜாஸ் சந்து கூறுகையில், கல்லூரியை மூடியது குறித்து எங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இன்னும் சில வாரங்களில் எங்களில் பலர் இறுதியாண்டுத் தேர்வை முடித்து பட்டத்தை வாங்கவிருந்தனர்.
நாங்கள் நன்றாகப் படித்து வந்தோம். கட்டணங்களையும் முறையாக கட்டி வந்தோம். யாரும் எந்த கட்டணப் பாக்கியும் வைத்திருக்கவில்லை. இப்போது கல்லூரிகளை ஏன் மூடினார்கள் என்று தெரியவில்லை. எங்களது எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது என்றார்.
இந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் மற்றும் பிற ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மெல்போர்ன் மற்றும் சிட்னி நகரங்களில் இந்த கல்லூரிகளுக்கு 13 வளாகங்கள் உள்ளன.












Click it and Unblock the Notifications