புதுச்சேரியில் ரூ.60 கோடி செலவில் ஐடி பார்க்!
புதுச்சேரி: புதுவையில் ரூ.60 கோடி முதலீட்டில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமையவிருப்பதாக என்று மத்திய திட்டத்துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
புதுச்சேரியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா நிறுவ வேண்டும் என்று அந்தத் துறையின் அமைச்சர் ராசாவிடம் பேசினேன். இதற்காக மத்திய அரசு ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக உறுதி அளித்தார். புதுச்சேரி அரசு இதற்காக 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதன் மூலம் புதுச்சேரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.
புதுச்சேரி யூனியன் பிரதேச பகுதியில் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. காரைக்கால் பகுதியில் இந்த நிறுவனத்தை அமைக்க வேண்டும். இதனால் காரைக்கால் பகுதியில் கல்வித்தரம் உயரும்.
மேலும் காரைக்கால் பகுதியின் முன்னேற்றம் தொடர்பாக முதல்வர் வைத்திலிங்கம் ஆய்வு நடத்தி வருகிறார், என்றார் நாராயணசாமி.