கட்டணத்தை ரூ.200 உயர்த்தின ஜெட், கிங்ஃபிஷர்!
மும்பை: விமான எரிபொருள் கட்டணத்தை அரசு எண்ணெய் நிறுவனங்கள் கணிசமாக உயர்த்தியதைத் தொடர்ந்து, விமான நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியுள்ளன.
தனியார் விமான நிறுவனங்களான ஜெட் ஏர்வேஸ் மற்றும் கிங் பிஷர் உள்நாட்டு வழித்தடங்களில் ரூ.200 கட்டண உயர்வை உடனடியாக அமல்படுத்தியுள்ளன.
எரிபொருள் உபரி வரி என்ற வகையில் இந்தக் கட்டண உயர்வு சேர்க்கப்பட்டுள்ளது. ஜெட் நிறுவனத்தின் ஜெட் லைட் மற்றும் ஜெட் கனெக்ட் போன்ற குறைந்த கட்டண சேவை விமானங்களிலும் இந்தக் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கிங் பிஷர் விமானங்கள் அனைத்திலும் உடனடியாக இந்த கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
1000 கிலோமீட்டருக்குக் குறைவான தூரத்தில் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது.
இப்போதைய நிலவரப்படி ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருளுக்கு ரூ.39000க்கும் அதிகமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது (நகரங்களுக்கேற்ப கட்டணத்தில் மாறுதல் இருக்கும்).