முல்லைப் பெரியாறு: மதிமுக உண்ணாவிரதம்-ஜெ பங்கேற்கிறார்
தேனியில் நடந்த முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பு பொதுக் கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இதைத் தெரிவித்தார்.
கூட்டத்தில் அவர் பேசுகையில்,
முல்லைப் பெரியாறு அணை உடையும் அபாயத்தில் உள்ளதாக கேரள அரசு பொய் பிரசாரம் செய்கிறது. முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் 30 முறை பூகம்பம் ஏற்பட்டும் அணை உடையவில்லை.
அணையில் இருந்து 375 அடி தூரத்தில் ஒரு லட்சத்து இருபதாயிரம் டன் பாறைகளை வெடி வைத்து உடைக்கும் போது பெரியாறு அணை நிச்சயம் பாதிக்கப்படும்.
இதன்மூலம் தென் தமிழகம் வறண்டு, இரண்டு லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் நிலம் தரிசாக மாறும். திமுகவை சேர்ந்த ராஜா சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது தான் கேரள அரசு புதிய அணை கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பித்தது. அப்போதே அதை ஏன் அவர் நிராகரிக்கவில்லை?.
தற்போது அணைக்கு மத்திய தொழிற்படை பாதுகாப்பு வேண்டும் என்று முதல்வர் கேட்டுள்ளார். இதை, மத்திய உளவு பிரிவு 2006ம் ஆண்டிலேயே பரிந்துரை செய்துள்ளது.
கேரள அரசு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்காமல் புதிய அணை கட்டினால் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு அனுப்பும் அரிசி, காய்கறி, பருப்பு, கால்நடைகளை நிறுத்தி, பொருளாதார தடை விதிப்போம்.
கேரள அரசு தமிழர்களின் குரல்வளையை நெரிக்க நினைத்தால், சும்மா இருக்க மாட்டோம். தென் தமிழகமே திரண்டு எழும். கேரள அரசு புதிய அணை கட்டும் பணி துவங்கும் நாள் தான், இந்திய தேசிய ஒருமைப்பாடு உடையும் நாளாக இருக்கும்.
புதிய அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தி நவம்பர் 14ல் மதிமுக சார்பில் மதுரையில் நடக்கும் உண்ணாவிரதத்தில் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா பங்கேற்பார் என்றார் வைகோ.