கடலூர் சிறையில் விசாரணை கைதி தற்கொலை
கடலூர்: கடலூர் மத்திய சிறையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்ற கைதி வெங்கடேசன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.
திமுக கிளை செயலாளர் கருணாகரன் என்பவர் கொலை வழக்கில் வெங்கடேசன் (35) என்பவர் கைது செய்யப்பட்டு, விசாரணை கைதியாக கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறையில் இருந்த வெங்கடேசனை அவரது உறவினர்கள் யாரும் இது வரை வந்து பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த வெங்கடேசன் கடந்த 4ம் தேதி சிறையில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
சிறை அதிகாரிகள் அவரை காப்பாற்றி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இந்நிலையில் நேற்று அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார்.
இதற்கிடையே, அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி வெங்கடேசனின் மனைவியும் உறவினர்களும் கடலூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். பின்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்.டி.ஓ உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட வைத்தனர்.












Click it and Unblock the Notifications