ரூ. 1.28 லட்சம் கோழிக்குஞ்சுள் கடத்தல் - மீட்பு
செங்கோட்டை: தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட ரூ. 1.28 லட்சம் மதிப்புள்ள கோழி குஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு நூதன முறையில் பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. திடீர் திடீரென போலீசார் அதிரடி சோதனையால் எரிசாராயம், அரிசி உள்ளிட்டவை பிடிபடுவதும் நடந்து வருகிறது.
இந்நிலையில் ஈரோடு பகுதியை சேர்ந்த கோழிகுஞ்சு வியாபாரி ஒருவர் புளியரை பகுதியில் மொத்தமாக 80 கூடைகளில் ஆயிரக்கனக்கான ஆபூர்வ வகையை சேர்ந்த கிரிராஜா என்ற கோழி குஞ்சுகளை இறக்கி வைத்து அங்கிருந்து சைக்கிள் மூலம் கேரள மாநிலம் ஆரியங்காவு முருகன் பாஞ்சல் என்ற பகுதியில் கோழி குஞ்சு கொண்டு போய் வேன் மூலம் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்வதற்காக நேற்று கொண்டு சென்றார். மொத்தமாக கோழி குஞ்சுகளை தமிழக-கேரள வணிக வரித்துறை அதிகாரிகளை ஏமாற்றி கொண்டு சென்றுள்ளார்.
நேற்றும் அப்படியே கொண்டு சென்று வேனில் ஏற்றும்போது அப்பகுதி மக்கள் கேரள வணிக வரித்துறை சோதனை சாவடிக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் விரைந்து வந்துள்ளனர். அதற்குள் கோழி மொத்த வியாபாரி வேனை எடுத்துக் கொண்டு தப்பிவிட்டார்.
விரைந்து வந்த அதிகாரிகள் 80 கூடைகளில் இருந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகுஞ்சுகளை கைப்பற்றினர்.
இதுகுறித்து கேரள வணிக வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், அரசுக்கு முறையாக ரூ.20 ஆயிரம் விற்பனை வரி செலுத்த வேண்டும். வரி ஏய்ப்பு செய்வதால் ரூ.1.28 லட்சம் மதிப்புள்ள கோழி குஞ்சுகளை பறிமுதல் செய்துள்ளோம் என்றார்.