கரும்பு விலை-மத்திய அரசின் அவசர சட்டத்தை ஏற்க தமிழகம் மறுப்பு
சென்னை: கரும்புக்கான பரிந்துரை விலை தொடர்பான மத்திய அரசின் அவசரச் சட்டத்தை தமிழக அரசு ஏற்க மறுத்துவிட்டது.
கரும்புக்கான நியாய மற்றும் ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயிக்கும். அதற்கும் மேல் எந்த மாநில அரசாவது ஆதார விலையை உயர்த்தி அறிவித்தால் அதை மாநில அரசுதான் வழங்க வேண்டும் என்று மத்திய அரசின் அவசரச் சட்டம் கூறுகிறது.
இதை தமிழகம் எதிர்க்காதது ஏன்? என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியிருந்தார்.
அவருக்கு பதிலளித்து தமிழக விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறி்க்கையில்,
கரும்பு கட்டுப்பாட்டுச் சட்டத்தின்படி, மத்திய அரசு அறிவிக்கும் சட்டபூர்வ குறைந்தபட்ச விலை தமிழக விவசாயிகளுக்கு கட்டுப்படியாகவில்லை. இதனால், திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கரும்புக்கு மாநில அரசின் பரிந்துரை விலை அறிவிக்கப்படும்.
ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்த 2001ல் இருந்து 5 ஆண்டுகள் வரை மத்திய அரசு நிர்ணயித்த விலையை மட்டுமே வழங்கி வந்தது.
2009-10ம் ஆண்டுக்கு 9.5 சதவீதம் சர்க்கரை பிழிதிறன் கொண்ட ஒரு டன் கரும்புக்கு ரூ.1077.60 எனவும், ஒவ்வொரு 0.1 சர்க்கரை பிழிதிறனுக்கும் ரூ.11.30 என்றும் மத்திய அரசு விலை அறிவித்தது.
இவ்வாறு அளிப்பது விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாது என மாநில அரசு கருதியதால், பரிந்துரை விலையாக ரூ.359.80 என அதிகரித்தும் 9.5 சதவீதம் சர்க்கரை பிழிதிறன் கொண்ட ஒரு டன் கரும்புக்கு ரூ.1,437.40 என்றும், சராசரி பிழிதிறன் அடிப்படையில் கூடுதலாக ரூ.22.60 எனவும், வண்டி வாடகையாக டன்னுக்கு ரூ.90-ம் சேர்த்து ஆக மொத்தம் ஒரு டன் கரும்புக்கு சராசரியாக ரூ.1,550 வழங்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில், மத்திய அரசின் முடிவின்படி 9.5 சதவீதம் சர்க்கரை பிழிதிறன் உள்ள ஒரு டன் கரும்புக்கு நியாயமான மற்றும் ஆதார விலையாக ரூ.1,298.40 என்று அறிவித்திருப்பதால், தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்த விலையை விட ரூ.139 குறைவாக விவசாயிகள் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால், ரூ.1,298.40 உடன் மாநில அரசின் கூடுதல் விலை ரூ.359.80யைஐ சேர்த்து ரூ.1,658.20 வழங்க வேண்டும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மத்திய அரசு விலையை அறிவிப்பதற்கு முன்பே, தமிழகத்தில் முத்தரப்புக் கூட்டத்தைக் கூட்டி விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், ஆலை உரிமையாளர்கள், கூட்டுறவு மற்றும் பொதுத் துறை தனி அலுவலர்களின் கருத்துகளைக் கேட்டு ஒரு டன் கரும்புக்கு ரூ.1,550 கிடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதில், எந்த மாற்றமும் இல்லை. கரும்புக்கான நியாயமான மற்றும் ஆதார விலையை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலே மத்திய அரசினுடைய முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை என்றுதான் பொருள்.
தமிழக அரசின் கருத்து மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார் வீரபாண்டி ஆறுமுகம்.