விருதுநகரில் ஜவுளி பூங்கா: கோவை-மதுரையில் நூல் மண்டிகள்
மத்திய கைத்தறி வளர்ச்சிக் கழகம் சார்பில் பட்டு, கைத்தறி துணிகள் கண்காட்சியை வள்ளுவர் கோட்டத்தில் துவக்கி வைத்த தயாநிதி மாறன் நிருபர்களிடம் பேசுகையில்,
முதல்முறையாக தமிழ்நாட்டில் பட்டு கண்காட்சி மற்றும் விற்பனை சென்னையில் நடைபெறுகிறது. 23ம் தேதி வரை நடக்கும் இந்தக் கண்காட்சியில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் கைத்தறி பட்டு ஆடைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
கதர் தயாரிப்பு குறைந்துகொண்டே வருகிறது. கதர் துணிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. எனவே கதர் உற்பத்தியை பெருக்குவதற்காக மத்திய அரசு நூலை மானிய விலையில், மில் விலையிலே வழங்கிக் கொண்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் பூங்கா விருதுநகரில் அமைய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரிக்கை வைத்தார்.
அந்தக் கோரிக்கையை ஏற்று இப்போது விருதுநகரில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைப்பதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மத்திய அரசு சார்பில் ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சீபுரத்தில் நெசவு பூங்கா அமைக்க வேண்டும் என்றும் முதல்வர் கோரியுள்ளார். இதை ஏற்று ரூ.40 கோடி செலவில் பட்டு நெசவு பூங்காவை அங்கு அமைக்கவுள்ளோம். இதற்கான நிலத்தை மாநில அரசு ஏற்கனவே ஒதுக்கிவிட்டது.
டந்த ஆண்டில் உலக அளவில் 10 முதல் 12 சதவீதம் ஜவுளி ஏற்றுமதி வீழ்ச்சி அடைந்தது. தற்போது ஏற்றுமதி சற்று உயர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
பஞ்சு உற்பத்தியை பெருக்கவும், பஞ்சு நூல் உற்பத்தியை அதிகரிக்கவும் முதல் முறையாக தமிழ்நாட்டில் காட்டன் கார்ப்பரேஷன் நிறுவனம் கோவை மற்றும் மதுரையில் நூல் மண்டிகளை திறக்கவுள்ளது.
இந்த மண்டிகள் குறைந்த விலையில் பஞ்சு நூல் விற்பனை செய்யும்.
இதுவரை நஷ்டத்தில் இயங்கி வந்த தேசிய ஜவுளிக் கழகத்தை சீரமைத்துள்ளேன். இதனால் முதல் முறையாக லாபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றார்.