சிப்காட் அமைக்க 1,700 ஏக்கர் விளை நிலத்தை தரிசாக காட்ட முயற்சி?
சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக 1,700 ஏக்கர் விளை நிலத்தை தரிசு நிலமாகக் காட்ட முயற்சிகள் நடப்பதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உள்பட்ட மேல மீனாட்சிபுரம், கீழ மீனாட்சிபுரம், தெற்கு ஆவாரங்காடு, ராமச்சந்திராபுரம், சுப்பிரமணியாபுரம், லட்சுமிபுரம், மேட்டூர், முப்பிலிப்பட்டி ஆகிய 8 கிராமங்களை உள்ளடக்கிய 1,700 ஏக்கர் விவசாய நிலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்காக இந்த விவசாய நிலத்தை ஆர்ஜிதம் செய்வதற்கான ஆய்வு பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இந்த 8 கிராமங்களிலும் 70 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட மக்கள். மீதம் உள்ளோர் பிற்படுத்தப்பட்டோர்.
இவர்களுக்கு இந்த நிலம்தான் வாழ்வாதாரமாகும். 1,700 ஏக்கர் விளை நிலத்தை தமிழக அரசு ஆர்ஜிதம் செய்தால் 8 கிராமங்களைச் சேர்ந்த 5,000 பேர் வேறு வழி இல்லாமல் அனாதைகளாக நிற்க வேண்டியிருக்கும்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பதவி ஏற்ற திமுக அரசு நிலம் இல்லா ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவதாக உறுதி கூறியது. ஆனால் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளிடம் இருந்து நிலத்தை கைப்பற்ற நினைப்பது சரியல்ல.
எனவே விளை நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் முயற்சியை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு விளை நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் முயற்சியை அரசு கைவிடாவிட்டால் தமிழகம் தழுவிய மிகப் பெரிய போராட்டம் நடைபெறும் என்றார்.
அப்போது 8 கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் உள்பட 60 பேரும் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications