மேற்கு வங்கத்தைவிட தமிழகமே 'டாப்'-கருணாநிதி
சென்னை: ஏழைகளுக்கு நிலம் வினியோகம் செய்வதில் மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சி ஆளும் மேற்கு வங்கத்தைவிட, தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராசன் விடுத்த அறிக்கையில் சிறுதாவூரில் மெத்தனம் காட்டுவது யார் என்று கேள்வி கேட்டிருக்கிறாரே?
பதில்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காவேரிராஜபுரத்தில் நீதிபதி தினகரனுக்கு எதிராக நில மீட்புப் போராட்டம் நடத்துவதைப் பற்றி நான் விடுத்த அறிக்கையில்- நீதிபதி தினகரன் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார் என்று கூறி, அதை மீட்டு தலித் மக்களுக்கு வழங்கப் போகிறேன் என்ற போராட்டம் நடத்த அவசரம் காட்டுகின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நண்பர்கள், சிறுதாவூரில் ஜெயலலிதா, தலித்களுக்காக வழங்கப்பட்ட நிலத்தை அபகரித்து, ஆக்கிரமித்து வைத்திருப்பதாக எத்தனையோ மாதங்களுக்கு முன்பு சொன்னார்களே, இத்தனை மாதங்களாக அதற்காக நிலமீட்புப் போராட்டம் நடத்த ஏன் முன்வரவில்லை?, இங்கே மட்டும் அவசரம் காட்டுவதற்கு என்ன உள்நோக்கம்? என்று கேட்டிருந்தேன். அதற்கு வரதராசன் நேரடியாக எந்தப் பதிலும் சொல்லவில்லை.
மாறாக, சிறுதாவூர் நிலப் பிரச்சனைக்காக அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட சிவசுப்ரமணியம் கமிஷன் அறிக்கை வராததுதான் தாமதத்திற்குக் காரணம் என்று கூறுகிறார். அந்த அறிக்கை வராத நிலையில் கூட மார்க்சிஸ்ட் தோழர்கள் நிலமீட்புப் போராட்டம் நடத்தியிருக்கலாமே?, அதற்கு ஏன் மார்க்சிஸ்ட் முன்வரவில்லை?, ஆனால் காவேரிராஜபுரத்தில் ஒரு கமிஷன் கூட இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் நிலமீட்புப் போராட்டத்திற்கு அவ்வளவு அவசரம் ஏன்?.
கேள்வி: ஒவ்வொரு கட்சியினரும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு, தாங்களே நிலங்களையோ, கட்டிடங்களையோ கைப்பற்றி, தங்கள் விருப்பப்படி வழங்குகின்றோம் என்றால் இதென்ன தமிழ்நாடா? மேற்கு வங்கமா? என்று நீங்கள் உங்கள் அறிக்கையிலே குறிப்பிட்டதற்கு, நிலச் சீர்திருத்தச் சட்டம் மேற்கு வங்கத்தில் எவ்வளவு சிறப்பாக அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும், தமிழ்நாட்டில் நிலச் சீர்திருத்தச் சட்டம் அண்ணாவாலேயே ''உச்ச வரம்பா, மிச்ச வரம்பா'' என்று ஏகடியம் பேசப்பட்ட நிலை மாறவில்லை என்றும் வரதராசன் சொல்லியிருக்கிறாரே?
பதில்: நிலச்சீர்திருத்தச் சட்டம் எந்த அளவிற்கு தமிழகத்திலே திமுக ஆட்சியிலே செயல்பட்டது என்பதை என் அறிக்கையிலே புள்ளி விவரங்களோடு கொடுத்திருக்கிறேன். அதைவிட மேற்கு வங்கத்தில் எவ்வளவு நிலம் அரசின் சார்பில் எடுத்துக் கொள்ளப்பட்டது, அதிலே எத்தனை பேர்களுக்கு இலவசமாக அந்த நிலம் கொடுக்கப்பட்டது என்பது போன்ற விவரங்களை வரதராஜன் தனது அறிக்கையிலே தெரிவித்திருந்தால் நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். பொத்தாம் பொதுவாக அங்கே சிறப்பாக அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் மண்டல் கமிஷன் அறிக்கையே அதை பதிவு செய்துள்ளது என்றும் பதில் அளித்தால் போதுமா? உச்ச வரம்பா, மிச்ச வரம்பா என்று அண்ணா ஏகடியம் செய்ததாக வரதராசன் சொல்லியிருக்கிறார்.
அண்ணா சொன்னது திமுக ஆட்சியிலே நிறைவேற்றிய உச்ச வரம்பு சட்டத்தைப் பற்றியல்ல. அதற்கு முன்பிருந்த நிலைமையைச் சொன்னார். அதனால் தான் திமுக ஆட்சிக் காலத்தில் 1970ம் ஆண்டு 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்று உச்சவரம்பு சட்டம் இயற்றப்பட்டது. கழக அரசு இயற்றிய அந்தச் சட்டத்தின் காரணமாக மிச்ச வரம்பாக - 1,78,880 ஏக்கர் நிலம், உபரி நிலம் என்று கைப்பற்றப்பட்டு தகுதியுள்ள, நிலமற்ற 1,37,236 ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது என்றும், அதிலே 61,985 பேர் தலித்துகள் என்றும் நான் விரிவாக அறிக்கை கொடுத்த பின்னரும் உச்சவரம்பு, மிச்ச வரம்பு என்று வரதராசன் சொல்லியிருப்பது சரிதானா?
வரதராசன் கூறியிருப்பதால் தமிழ்நாட்டிற்கும், மேற்கு வங்கத்திற்கும் இடையே ஒரு ஒப்பீட்டைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
2006-2007ம் ஆண்டு தமிழ்நாட்டில் வழங்கப்பட்ட நிலத்தின் பரப்பளவு 77,117 ஏக்கர். 2006-2007ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் வழங்கப்பட்ட நிலத்தின் பரப்பளவு 18,340 ஏக்கர்.
2007-2008ம் ஆண்டு தமிழ்நாட்டில் வழங்கப்பட்ட நிலத்தின் பரப்பளவு 83,554 ஏக்கர். மேற்கு வங்கத்தில் வழங்கப்பட்ட நிலத்தின் பரப்பளவு 8,498 ஏக்கர்.
1996-2001 திமுக ஆட்சி காலத்தில் ஐந்தாண்டுகளில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டாக்களின் எண்ணிக்கை 9,50,449. 13-5-2006 முதல் கழக ஆட்சியில் இதுவரை வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டுமனைப் பட்டாக்களின் எண்ணிக்கை 6,46,785. மேற்கு வங்க மாநிலத்தில், 2006ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்கள் 1,577. 2007ம் ஆண்டில் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்கள் 1,839.
இந்தப் புள்ளிவிவரங்களின்படி வரதராசனின் கட்சி ஆளுகின்ற மேற்கு வங்கத்தை விட, அவர் வாழ்கின்ற தமிழகத்திலே இந்தப் பணிகள் எதுவும் குறைந்துவிடவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
கேள்வி:- சிறுதாவூர் நில ஆக்கிரமிப்பு குறித்து நியமிக்கப்பட்ட நீதிபதி சிவசுப்பிரமணியத்துக்கு வேறொரு விசாரணைப் பணி தரப்பட்டதால்தான், சிறுதாவூர் பிரச்சினை கிடப்பில் போடப்பட்டுள்ளது என்று வரதராசன் சொல்லியிருக்கிறாரே?
பதில்: நீதிபதி சிவசுப்பிரமணியம் சிறுதாவூர் குறித்த விசாரணையை முடித்து விட்ட காரணத்தால்தான் அவருக்கு வேறொரு பணி அளிக்கப்பட்டது. இடையில் சித்ரா என்பவர் உச்சநீதிமன்றத்தில் சிவசுப்பிரமணியம் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது செல்லாது என்று வழக்கு தொடுத்து, அது நிலுவையில் இருப்பதால்தான் சிறுதாவூருக்கான விசாரணை முடிந்து அறிக்கை தயாராக உள்ள நிலையிலும், அதனைத் தமிழக அரசுக்குக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கேள்வி: நேரடியாக எரிவாயு இணைப்புப் பெற்றவர்கள் ஒரு எரிவாயு சிலிண்டர் பெற்று 21 நாட்களுக்குப் பிறகு தான் மற்றொரு எரிவாயு சிலிண்டர் கேட்டுப் பதிவு செய்ய முடியும் என்பது உண்மையா?.
பதில்: இது முழுக்க முழுக்க தவறு. 23-2-2009 அன்று இந்தியன் ஆயில் கார்பரேஷன் தனது வினியோகஸ்தர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் "வாடிக்கையாளர் மறு சிலிண்டர் கேட்டு பதிவு செய்தால் 21 நாட்கள் ஆன பின்னரே பதிவு செய்ய வேண்டும் என்று கூறாமல் எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்ய வேண்டும்'' என்று தெரிவித்திருக்கிறது. எனவே 21 நாட்களுக்குப் பிறகுதான் பதிவு செய்ய முடியும் என்பது உண்மையல்ல.
கேள்வி: இலவச எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 6 சிலிண்டர் வழங்கினால் போதும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்த பிறகு தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?.
பதில்: மத்திய அரசிடமிருந்து அப்படி ஒரு உத்தரவு வந்ததும், தமிழக அரசின் சார்பில் அந்தத் துறையின் அமைச்சர் எ.வ.வேலுவும், துறையின் செயலாளரும் மத்திய அரசின் பெட்ரோலியத் துறையின் அமைச்சர் முரளி தியோராவுக்கும், செயலாளருக்கும் முறையே எழுதிய கடிதங்களில், இலவச எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 6 சிலிண்டர் வழங்கினால் போதாது என்றும், அவர்களுக்கும் மற்றவர்களுக்கு வழங்குவதைப் போலவே எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கிட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
திமுக ஆட்சியில் தரப்பட்ட இலவச எரிவாயு இணைப்பை பெற்று ஏராளமான தாய்மார்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால் ஆட்சியிலே இருந்தபோது அந்தத் திட்டத்தைப் பற்றி எண்ணிப் பார்க்காதவர்கள்தான் தற்போது கட்டிய வீட்டிற்கு குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதனை விடுத்து இனியாவது சிந்தனை செய்து செயல்படுவதும் - சீற்றம் குறைப்பதும்; நன்று - மிக நன்று; அதாவது நாட்டுக்கும் நமது மக்களுக்கும்!
இவ்வாறு கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications