சோமாலியா-15 இந்தியர்களுடன் இன்னொரு கப்பல் கடத்தல்
மொகாதீஷு: 15 இந்தியர்கள் உள்பட 18 பேருடன் பனாமா நாட்டுக் கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்று விட்டனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து சோமாலியா தலைநகர் மொகாதீஷுவுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காக ஜூபா ஜெனரல் டிரேடிங் கம்பெனி என்ற நிறுவனத்திடமிருந்து அல் மிஸான் என்ற கப்பலை சில சோமாலியா வர்த்தகர்கள் வாடகைக்கு அமர்த்தினர்.
இந்தக் கப்பலைத்தான் தற்போது சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்று விட்டனர். இதுகுறித்து தொழிலதிபர்கள் குழுவின் தலைவரான அப்திரிஸாக் அப்துல்காதிர் என்பவர் கூறுகையில், இந்தக் கப்பலில் 15 இந்தியர்கள், 2 பாகிஸ்தானியர்கள், ஒரு சோமாலியர் இருந்தனர்.
இந்தக் கப்பலில் 3000 டன் வர்த்தகப் பொருட்கள் உள்ளன. இதில் ஆயுதம் இருப்பதாக கூறப்படுவது தவறான தகவலாகும்.
துபாயிலிருந்து அக்டோபர் 24ம் தேதி இந்தக் கப்பல் கிளண்பியது. நவம்பர் 6 அல்லது 7ம் தேதி அது மொகாதிஷு வரும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் கப்பல் வரவில்லை. அதன் பின்னர் அதை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்று விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து கடற்கொள்ளையர்களிடமிருந்து எங்களுக்குத் தகவல் வந்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications