சினிமா பாணியில் கொலைகள், கற்பழிப்புகள்: 2 மதுரை வாலிபர்களுக்கு மரண தண்டனை
புதுச்சேரி: சினிமாவில் வருவதைப் போல பல்வேறு கொலை, கற்பழிப்புகளில் செயல்பட்ட இரண்டு மதுரை வாலிபர்களுக்கு மரண தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றமம் தீர்ப்பளித்துள்ளது.
கெளதம் இயக்கிய வேட்டையாடு விளையாடு படத்தில் இரண்டு வில்லன்கள் இருப்பார்கள். இருவரும் சேர்ந்து பல்வேறு இளம் பெண்களை ஏமாற்றி கொலைகளைச் செய்வார்கள்.
இதே பாணியில் மதுரையைச் சேர்ந்த செண்பகஸ்ரீகுமார், கும்மி குமரன் ஆகிய இரு இளைஞர்களும் பல பெண்களைக் கற்பழித்துக் கொன்றுள்ளனர்.
மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சங்கர் (19). இவருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி செண்பகஸ்ரீகுமார், கும்மி குமரன் ஆகியோர் புதுச்சேரி அழைத்து வந்தனர். செண்கப குமாரும், கும்மி குமரனும் மதுரை அருகே உள்ள திருப்புவனத்தைச் சேர்ந்தவர்கள்.
புதுச்சேரிக்கு அழைத்து வந்த சங்கரை அங்கு வைத்துக் கொலை செய்தனர். இந்த சம்பவம் 2001ல் நடந்தது. இந்த கொலை வழக்கில் துப்பு கிடைக்கவில்லை. இதனால் போலீஸார் குற்றவாளிகளைக் கைது செய்ய முடியாமல் திணறி வந்தனர்.
இந்த நிலையில் புதுச்சேரி, காலாப்பட்டு பகுதியில் இன்டர்நெட் மையம் நடத்தி வந்த மணிமொழி என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கில் செண்பகஸ்ரீகுமார், கும்மி குமரன் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சங்கரைக் கொன்றதும் இவர்கள்தான் என்று தெரிய வந்தது.
மேலும் பல்வேறு கற்பழிப்பு, கொலைகளிலும் இவர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இந்த இருவருக்கும் புதுச்சேரி 2வது மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சித்தார்த்தர் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
குமாரும், குமரனும் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள். நெருங்கிய நண்பர்கள். எதைச் செய்தாலும் சேர்ந்துதான் செய்வார்களாம். கொலை, கொள்ளை, கற்பழிப்பு என ஏகப்பட்ட அயோக்கியத்தனங்களைச் செய்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு மனைவியை எரித்து கொலை செய்த வழக்கில் புதுச்சேரி தவளக்குப்பம் போலீசார் செல்வராஜ் என்பவரை கைது செய்து காலாப்பட்டு மத்திய ஜெயிலில் அடைத்தனர். அப்போது செண்பகஸ்ரீகுமார், கும்மி குமரன் உள்பட 5 பேர் தங்கி இருந்த அறை செல்வராஜுக்கு ஒதுக்கப்பட்டது.
அப்போது அறையை சுத்தம் செய்யுமாறு செல்வராஜுவிடம் ஸ்ரீகுமார், கும்மி குமரன் கூறினர். அதற்கு அவர் மறுத்ததால் ஆவேசமடைந்து செல்வராஜைக் கொலை செய்து விட்டனர். இந்த வழக்கில், அவர்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது.
இது தவிர, 2002ம் ஆண்டில் புதுச்சேரி ஜெயில் வார்டனை தாக்கிய வழக்கிலும், திருச்சி காந்தி மார்க்கெட்டில் நடந்த வழிப்பறி வழக்கிலும் அவர்கள் ஏற்கனவே தண்டனை பெற்று இருக்கிறார்கள்.
காஞ்சிபுரம் பெண் கற்பழித்து கொலை...
இதேபோல, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி என்ற இளம் பெண்ணை கடந்த 2001ம் ஆண்டு புதருக்குள் வைத்து கற்பழித்துள்ளனர். பின்னர் அவரைக் கொன்று உடலை எரித்து விட்டுப் போய் விட்டனர்.
மறு நாள் காலை வந்து பார்த்தபோது உடல் பாதி எரிந்த நிலையில் இருந்ததால் மறுபடியும் எரித்து சாம்பலாக்கினர். பின்னர் இந்த சாம்பலை எடுத்துக் கொண்டு காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்குக் கிளம்பினர். வழியெல்லாம் அந்த சாம்பலைக் கொட்டி விட்டுச் சென்றனராம். இதுவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications